ஆதாமிலிருந்து, மோசேயின் மனைவி வரை நாம் கடந்த பதிவுகளில் பார்த்தோம். மோசே தவறு செய்தபோதும், மோசேயின் கீழ் அடங்கி இருந்தவர் யோசுவா. இன்னொரு சிறப்பான குணாதிசயம் என்னவென்றால், இந்த யோசுவா, கர்த்தருடைய சமுகத்தை விட்டு பிரியாதிருந்தவர். அதனால் தான் மோசேயின் பிள்ளைகளைத் தேவன் தெரிந்து கொள்ளாமல், யோசுவாவைத் தெரிந்து கொண்டார் கர்த்தர்.
11 ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளயத்துக்குத் திரும்பினான்; நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்.
யாத்திராகமம் 33:11
யோசுவா என்றாலே சிறுவயதிலிருந்தே நமக்கு கற்றுக் கொடுத்திருப்பது எரிகோ மதில்தான். யோசுவா எரிகோ பட்டணத்தைப் பிடித்தார் அல்லவா!. எரிகோ மதில் எப்படி இருந்தது தெரியுமா? எரிகோவை சுற்றிலும், இரண்டு சுவர்கள் இருந்தன. அந்தக் காலத்தில், விமானங்கள் எல்லாம் இல்லாததால், வான்வெளி தாக்குதல்கள் கிடையாது. எனவே, உயரமான சுற்று சுவர் கட்டினால் போதும், அந்த பட்டணம் பாதுகாப்பாக இருக்கும். அப்படித்தான் எரிகோ பட்டணமும், அங்கே இரண்டு பெரிய மதில் சுவர்கள் பட்டணத்தை சுற்றிலும் இருந்தது. வெளிப்புற சுவர்(மதில்) 12 முதல் 15 அடி அகலமானது, உட்புற சுவர் 6 அடி அகலமானது. இரண்டு சுவர்களுக்கும் இடையே, வெற்றிடம் 9 அடி அகலத்தில் இருந்தது. அந்த எரிகோ மதிலின் மேல் நான்கு இரதங்கள் போகும் அளவுக்கு அகலம் இருந்தது. அதாவது அந்த மதிலின் மேல் கிட்டத்தட்ட நான்கு கார்கள் ஒரே நேரத்தில் செல்லலாம். அவ்வளவு அகலமான சுவர். அந்த சுவரை வெளிப்புறமாக சாய்த்து கட்டியிருந்தார்கள். ஒருவேளை பெரிய பூமி அதிர்ச்சி ஏற்பட்டால், மதில் வெளிப்புறமாக விழும் அளவுக்கு கட்டியிருந்தார்கள். அந்த மதில் சுவரின் உள்ளேயே, அதாவது சுவருக்குள், உட்புறமாக ராணுவ சிப்பாய்களின் வீடுகள், விபச்சார விடுதி, சாராயம் விற்கும் இடம் போன்ற இடங்கள் இருந்தன.
இஸ்ரவேலர் ஆறு நாட்கள் தினமும் ஒருமுறை அந்த மதிலை சுற்றி வரும் போது, எரிகோ ராஜா எதுவுமே பண்ணவில்லை. ஏனென்றால் அவருக்குள் ஒரு தைரியம் இருந்தது. இவ்வளவு பலமான மதிலை இந்த இஸ்ரவேலரால் எதுவும் செய்ய முடியாது என்று இருந்து கொண்டார். ஆனால் ஏழாவது நாள் ஏழு தரம் சுற்றும் போது மதில் கீழே விழுந்தது. எப்படி விழுந்தது? மதில் உட்புறமாக விழுந்தது. அதனால் தான் எரிகோவின் குடிகள் எல்லாரும் அதிர்ச்சி அடைந்து விட்டனர். அவர்கள் அந்த நேரத்தில் யுத்தத்துக்கு தயாராக இல்லை. அவர்கள் அந்த தாக்குதலை எதிர்பார்க்கவும் இல்லை. மதில் வெளிப்புறம் விழுந்தால் கூட, அது பூமியதிர்ச்சி என்று நினைக்கலாம், ஆனால் வெளிப்புறம் சாய்வாக இருக்கும் மதில், உட்புறமாக விழுந்தது, எரிகோவின் மக்களை செயல்பட விடாமல் தடுத்தது. அந்த யுத்தம் கர்த்தருடைய யுத்தம்.
கர்த்தர் ஒவ்வொரு யுத்தத்திலும் இஸ்ரவேலருடன் இருந்தார். யோசுவா சொல் கேட்டு, சூரியன் அப்படியே நின்றது என்று பார்க்கிறோம். அந்த அளவுக்கு தேவனையே சார்ந்து யுத்தத்தை நடத்தியவர் யோசுவா.
12 கர்த்தர் எமோரியரை இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாக ஒப்புக்கொடுக்கிற அந்நாளிலே, யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, பின்பு இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக: சூரியனே, நீ கிபியோன்மேலும், சந்திரனே, நீ ஆயலோன் பள்ளத்தாக்கிலும், தரித்துநில்லுங்கள் என்றான்.
13 அப்பொழுது ஜனங்கள் தங்கள் சத்துருக்களுக்கு நீதியைச் சரிக்கட்டுமட்டும் சூரியன் தரித்தது, சந்திரனும் நின்றது; இது யாசேரின் புஸ்தகத்தில் எழுதியிருக்கவில்லையா; அப்படியே சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒருபகல்முழுதும் நடுவானத்தில் நின்றது.
14 இப்படிக் கர்த்தர் ஒரு மனிதனுடைய சொல்கேட்ட அந்நாளையொத்தநாள் அதற்கு முன்னுமில்லை அதற்குப்பின்னுமில்லை; கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம்பண்ணினார்.
யோசுவா 10:14
கர்த்தர் தாமே யோசுவாவோடு இருந்து யுத்தங்களை நடப்பித்தார். மோசே பிடித்த பட்டணங்களையும் யோசுவா பிடித்த பட்டணங்களையும் இணைத்து இஸ்ரேல் என்ற குட்டி நாடு உருவானது. நாம் பார்க்க இருக்கிற இஸ்ரேல் தேசம் இப்பொழுது உருவாகி விட்டது.
யோசுவா தேசத்தை 12 பிரிவுகளாகப் பிரித்தார். நாம் அறிந்தபடி, லேவி கோத்திரத்துக்கு பங்கு கிடையாது, அதற்கு பதிலாக யோசேப்பின் குமாரர் இருவருக்கும் பங்கு கொடுக்கப்பட்டது.1 கோத்திரத்துக்கு, 4 லேவி பட்டணங்கள் என்ற கணக்கில், ஒவ்வொரு கோத்திரத்துக்கும் நான்கு நான்கு லேவிய பட்டணங்கள் கட்டிக்கொடுத்தார் யோசுவா. (4*12=48 லேவிய பட்டணங்கள்) இது தேவனின் திட்டம். லேவியர் ஆசாரிய ஊழியம் செய்ய அழைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு சொந்தமாக பட்டணம் கிடையாது. லேவியருக்கு இரண்டு ஊழியங்கள் இருந்தது. முதலாவது ஆண்டவருக்கு ஆராதனை செய்வது. இரண்டாவது ஜனங்களுக்கு நியாயப்பிரமாணத்தை கற்றுக் கொடுப்பது. ஒரே இடத்தில் எல்லா லேவியரும் இருந்தால், மக்களுக்கு நியாயப் பிரமாணத்தைக் கற்றுக் கொடுக்க முடியாது என்ற காரணத்தினால், ஒவ்வொரு பட்டணத்திலும் நான்கு திசைகளிலும் லேவியருக்கு பட்டணம் கட்டிக் கொடுக்கப்பட்டது.
யோசுவாவும், தன் தலைமையான மோசேயைப் போல, இறப்பதற்கு முன் ஒரு பிரசங்கம் செய்கிறார். யோசுவாவுடன் கானானுக்குள் நுழைந்தவர்கள் இளைஞர்கள். அவர்களுக்கு செங்கடல் பிளந்தது, 10 வாதை பற்றி கூறினால், அது வெறும் கதையாகத் தெரியும் என்பதால் தான், எரிகோ மதில், சூரியன் மனிதன் பேச்சைக் கேட்பது போன்ற அசாதாரண காரியங்கள் நடந்தது. தன் வல்லமையை விளங்கப் பண்ணினார் கர்த்தர். கடைசியாக யோசுவாவும், கர்த்தரை விட்டு அந்நிய தேவ வழிபாட்டுக்கு செல்லக் கூடாது என்று பிரசங்கிக்கிறார். ஏனெனில் ஆண்டவர் அவர்களின் தேவனாக, அவர்கள் நடுவே இருக்க விரும்பினார். அன்றும், இன்றும், யூதர்கள் அந்தக் கட்டளைக்கு கீழ்ப்படியவே இல்லை என்பது கசப்பான உண்மை.
Leave a Reply