Scripture Portion: 2 Samuel 10, 1 Chronicles 19, Psalm 20

2 சாமுவேல் 10

1அதன் பின்பு அம்மோன் புத்திரரின் ராஜா மரித்துப்போனான்; அவன் குமாரனாகிய ஆனூன் அவன் பட்டத்திற்கு ராஜாவானான்.
2அப்பொழுது தாவீது: ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்குத் தயை செய்ததுபோல, அவன் குமாரனாகிய இவனுக்கு நான் தயை செய்வேன் என்று சொல்லி, அவன் தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல் சொல்ல, தன் ஊழியக்காரரை அனுப்பினான்; தாவீதின் ஊழியக்காரர் அம்மோன் புத்திரரின் தேசத்திலே வந்தபோது,
3அம்மோன் புத்திரரின் பிரபுக்கள் தங்கள் ஆண்டவனாகிய ஆனூனைப் பார்த்து: தாவீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில் அனுப்பினது, உம்முடைய தகப்பனைக் கனம்பண்ணுகிறதாய் உமக்குத் தோன்றுகிறதோ? இந்தப் பட்டணத்தை ஆராய்ந்து, உளவுபார்த்து, அதைக் கவிழ்த்துப்போட அல்லவோ தாவீது தன் ஊழியக்காரரை உம்மிடத்திற்கு அனுப்பினான் என்றார்கள்.
4அப்பொழுது ஆனூன்: தாவீதின் ஊழியக்காரரைப் பிடித்து, அவர்களுடைய ஒருபக்கத்துத் தாடியைச் சிரைத்து, அவர்களுடைய வஸ்திரங்களை இருப்பிடமட்டும் வைத்துவிட்டு, மற்றபாதியைக் கத்தரித்துப்போட்டு, அவர்களை அனுப்பிவிட்டான்.
5அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, ராஜா, அந்த மனுஷர் மிகவும் வெட்கப்பட்டபடியினால், அவர்களுக்கு எதிராக ஆட்களை அனுப்பி, உங்கள் தாடி வளருமட்டும் நீங்கள் எரிகோவிலிருந்து, பிற்பாடு வாருங்கள் என்று சொல்லச் சொன்னான்.
6அம்மோன் புத்திரர் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்டபோது, ஸ்தானாபதிகளை அனுப்பி, பெத்ரேகோப் தேசத்துச் சீரியரிலும், சோபாவிலிருக்கிற சீரியரிலும் இருபதினாயிரம் காலாட்களையும், மாக்காதேசத்து ராஜாவினிடத்தில் ஆயிரம்பேரையும், இஷ்தோபிலிருக்கிற பன்னீராயிரம்பேரையும், கூலிப்படையாக அழைப்பித்தார்கள்.
7அதைத் தாவீது கேள்விப்பட்டபோது, யோவாபையும் பராக்கிரமசாலிகளாகிய சமஸ்த இராணுவத்தையும் அனுப்பினான்.
8அம்மோன் புத்திரர் புறப்பட்டு, ஒலிமுகவாசலண்டையிலே போர்செய்ய அணிவகுத்து நின்றார்கள்; ஆனாலும் சோபாவிலும் ரேகோபிலுமிருந்து வந்த சீரியரும், இஷ்தோபிலும் மாக்காவிலுமிருந்து வந்த மனுஷரும், வெளியிலே பிரத்தியேகமாயிருந்தார்கள்.
9யோவாபோ இராணுவங்களின் படைமுகம் தனக்கு முன்னும் பின்னும் இருக்கிறதைக் காண்கையில், அவன் இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட எல்லா இராணுவங்களிலும் ஒரு பங்கைப் பிரித்தெடுத்து, அதைச் சீரியருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தி,
10மற்ற ஜனத்தை அம்மோன் புத்திரருக்கு எதிராக அணிவகுத்து நிறுத்தும்படி தன் சகோதரனாகிய அபிசாயினிடத்தில் ஒப்புவித்து:
11சீரியர் கைமிஞ்சுகிறதாயிருந்தால் நீ எனக்கு உதவிசெய்யவேண்டும்; அம்மோன் புத்திரர் கை மிஞ்சுகிறதாயிருந்தால் நான் உனக்கு உதவிசெய்ய வருவேன்.
12தைரியமாயிரு: நம்முடைய ஜனத்திற்காகவும், நம்முடைய தேவனுடைய பட்டணங்களுக்காகவும் சவுரியத்தைக் காட்டுவோம்; கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.
13யோவாபும் அவனோடிருந்த ஜனமும் சீரியர்மேல் யுத்தம்பண்ணக் கிட்டினார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.
14சீரியர் முறிந்தோடுகிறதை அம்மோன் புத்திரர் கண்டபோது, அவர்களும் அபிசாயிக்கு முன்பாக முறிந்தோடிப் பட்டணத்திற்குள் புகுந்தார்கள்: அப்பொழுது யோவாப் அம்மோன் புத்திரரை விட்டுத் திரும்பி எருசலேமுக்கு வந்தான்.
15தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டதைச் சீரியர் கண்டபோது, ஒருமிக்கக் கூடினார்கள்.
16ஆதாரேசர் நதிக்கு அப்பாலிருந்த சீரியரையும் அழைத்தனுப்பினான்; அவர்கள் ஏலாமுக்கு வந்தார்கள்; ஆதாரேசருடைய படைத்தலைவனாகிய சோபாக் அவர்களுக்கு முன்னாலே சென்றான்.
17அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் இஸ்ரவேலையெல்லாம் கூட்டிக்கொண்டு, யோர்தானைக் கடந்து, ஏலாமுக்குப் போனான்; சீரியர் தாவீதுக்கு எதிராக இராணுவங்களை அணிவகுத்து நின்றார்கள்; அவனோடு யுத்தம்பண்ணுகிறபோது,
18சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தாவீது சீரியரில் எழுநூறு இரதவீரரையும் நாற்பதினாயிரம் குதிரைவீரரையும் கொன்று, அவர்களுடைய படைத்தலைவனாகிய சோபாகையும் சாகும்படி வெட்டிப்போட்டான்.
19அப்பொழுது ஆதாரேசரைச் சேவிக்கிற சகல ராஜாக்களும் தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டதைக் கண்டு, இஸ்ரவேலரோடே சமாதானம்பண்ணி, அவர்களைச் சேவித்தார்கள். அப்புறம் அம்மோன் புத்திரருக்கு உதவிசெய்ய சீரியர் பயப்பட்டார்கள்.

1 நாளாகமம் 19

1அதன்பின்பு, அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய நாகாஸ் மரித்து, அவன் குமாரன் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
2அப்பொழுது தாவீது: ஆனூனின் தகப்பனாகிய நாகாஸ் எனக்குத் தயவு செய்ததுபோல, நானும் அவன் குமாரனாகிய இவனுக்குத் தயவுசெய்வேன் என்று சொல்லி, அவன் தகப்பனுக்காக அவனுக்கு ஆறுதல் சொல்ல ஸ்தானாபதிகளை அனுப்பினான்; தாவீதின் ஊழியக்காரர் ஆனூனுக்கு ஆறுதல் சொல்ல அம்மோன் புத்திரரின் தேசத்திலே வந்தபோது,
3அம்மோன் புத்திரரின் பிரபுக்கள் ஆனூனைப் பார்த்து: தாவீது ஆறுதல் சொல்லுகிறவர்களை உம்மிடத்தில் அனுப்பினது, உம்முடைய தகப்பனைக் கனம்பண்ணுகிறதாய் உமக்குத் தோன்றுகிறதோ? தேசத்தை ஆராயவும், அதைக் கவிழ்த்துப்போடவும், உளவுபார்க்கவும் அல்லவோ, அவன் ஊழியக்காரர் உம்மிடத்தில் வந்தார்கள் என்று சொன்னார்கள்.
4அப்பொழுது ஆனூன்: தாவீதின் ஊழியக்காரரைப் பிடித்து, அவர்கள் தாடியைச் சிரைத்து, அவர்களுடைய வஸ்திரங்களை இருப்பிடமட்டும் வைத்துவிட்டு, மற்ற பாதியைக் கத்தரித்துப்போட்டு, அவர்களை அனுப்பிவிட்டான்.
5அந்த மனுஷர் வருகையில், அவர்கள் செய்தி தாவீதுக்கு அறிவிக்கப்பட்டது; அப்பொழுது அந்த மனுஷர் மிகவும் வெட்கப்பட்டபடியினால், அவர்களுக்கு எதிராக ராஜா ஆட்களை அனுப்பி: உங்கள் தாடி வளருமட்டும் நீங்கள் எரிகோவிலிருந்து, பிற்பாடு வாருங்கள் என்று சொல்லச்சொன்னான்.
6அம்மோன் புத்திரர் தாங்கள் தாவீதுக்கு அருவருப்பானதைக் கண்டபோது, ஆனூனும் அம்மோன் புத்திரரும் மெசொப்பொத்தாமியாவிலும் மாக்காசோபா என்னும் சீரியரின் தேசத்திலுமிருந்து தங்களுக்கு இரதங்களும் குதிரை வீரரும் கூலிக்கு வரும்படி ஆயிரம் தாலந்து வெள்ளி அனுப்பி,
7முப்பத்தீராயிரம் இரதங்களையும், மாக்காவின் ராஜாவையும், அவன் ஜனத்தையும் கூலிப்படையாக அழைப்பித்தான்; இவர்கள் வந்து, மேதேபாவுக்கு முன்புறத்திலே பாளயமிறங்கினார்கள்; அம்மோன் புத்திரரும் தங்கள் பட்டணங்களிலிருந்து கூடிக்கொண்டு யுத்தம்பண்ணவந்தார்கள்.
8அதைத் தாவீது கேட்டபோது, யோவாபையும் பலசாலிகளின் இராணுவம் முழுவதையும் அனுப்பினான்.
9அம்மோன் புத்திரர் புறப்பட்டுவந்து, பட்டணத்து வாசலண்டையில் அணிவகுத்தார்கள்; வந்த ராஜாக்கள் தனித்து வெளியிலே போருக்கு ஆயத்தமாய் நின்றார்கள்.
10யுத்த இராணுவங்களின் முகப்பு தனக்கு முன்னும் பின்னும் இருக்கிறதை யோவாப் கண்டு, அவன் இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட அனைவரிலும் ஒரு பங்கைப் பிரித்தெடுத்து, அதைச் சீரியருக்கு எதிராக நிறுத்தி,
11மற்ற ஜனத்தை அம்மோன் புத்திரருக்கு எதிராகப் போருக்கு ஆயத்தப்படுத்தி, தன் சகோதரனாகிய அபிசாயிக்கு ஒப்புவித்து, அவனை நோக்கி:
12என்னைப்பார்க்கிலும் சீரியர் பலங்கொண்டால் நீ எனக்குத் துணைநில்; உன்னைப்பார்க்கிலும் அம்மோன் புத்திரர் பலங்கொண்டால் நான் உனக்குத் துணை நிற்பேன்.
13தைரியமாயிரு; நாம் நம்முடைய ஜனத்திற்காகவும், நமது தேவனுடைய பட்டணங்களுக்காகவும் திடன்கொண்டிருக்கக்கடவோம்; கர்த்தர் தமது பார்வைக்கு நலமானதைச் செய்வாராக என்றான்.
14பின்பு யோவாபும் அவனோடிருந்த ஜனமும் சீரியரோடு யுத்தம்பண்ணச் சேர்ந்தார்கள்; அவர்கள் அவனுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்.
15சீரியர் முறிந்தோடுகிறதை அம்மோன் புத்திரர் கண்டபோது, அவர்களும் அவன் சகோதரனாகிய அபிசாயிக்கு முன்பாக முறிந்தோடிப் பட்டணத்திற்கு உட்பட்டார்கள்; யோவாப் திரும்ப எருசலேமுக்கு வந்தான்.
16தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டதைக் கண்டபோது, அவர்கள் நதிக்கு அப்புறத்திலிருக்கிற சீரியரை வரவழைத்தார்கள்; ஆதாரேசரின் படைத்தலைவனாகிய சோப்பாக் அவர்களுக்கு முன்னாலே நடந்துபோனான்.
17அது தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, அவன் இஸ்ரவேலையெல்லாம் கூட்டிக்கொண்டு, யோர்தானைக் கடந்து, அவர்களுக்குச் சமீபமாய் வந்தபோது, அவர்களுக்கு எதிராக இராணுவங்களை நிறுத்தினான்; தாவீது சீரியருக்கு எதிராக இராணுவங்களைப் போருக்கு ஆயத்தப்படுத்தினபின் அவனோடு யுத்தம்பண்ணினார்கள்.
18சீரியர் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிந்தோடினார்கள்; தாவீது சீரியரில் ஏழாயிரம் இரதங்களின் மனுஷரையும், நாற்பதினாயிரம் காலாட்களையும் கொன்று, படைத்தலைவனாகிய சோப்பாக்கையும் கொன்றான்.
19தாங்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டதை ஆதாரேசரின் சேவகர் கண்டபோது, அவர்கள் தாவீதோடே சமாதானம்பண்ணி, அவனைச் சேவித்தார்கள்; அப்புறம் அம்மோன் புத்திரருக்கு உதவிசெய்ய சீரியர் மனதில்லாதிருந்தார்கள்.

சங்கீதம் 20

(இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்)
1ஆபத்துநாளிலே கர்த்தர் உமது ஜெபத்தைக் கேட்பாராக; யாக்கோபின் தேவனுடைய நாமம் உமக்கு உயர்ந்த அடைக்கலமாவதாக.
2அவர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து உமக்கு ஒத்தாசையனுப்பி, சீயோனிலிருந்து உம்மை ஆதரிப்பாராக.
3நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாய் ஏற்றுக்கொள்வாராக. (சேலா)
4அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.
5நாங்கள் உமது இரட்சிப்பினால் மகிழ்ந்து, எங்கள் தேவனுடைய நாமத்திலே கொடியேற்றுவோம்; உமது வேண்டுதல்களையெல்லாம் கர்த்தர் நிறைவேற்றுவாராக.
6 கர்த்தர் தாம் அபிஷேகம்பண்ணினவரை இரட்சிக்கிறார் என்பதை இப்பொழுது அறிந்திருக்கிறேன்; தமது வலதுகரம் செய்யும் இரட்சிப்பின் வல்லமைகளைக் காண்பித்து, தமது பரிசுத்த வானத்திலிருந்து அவருடைய ஜெபத்தைக் கேட்பார்.
7சிலர் இரதங்களைக் குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மை பாராட்டுகிறார்கள்; நாங்களோ எங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைக் குறித்தே மேன்மை பாராட்டுவோம்.
8அவர்கள் முறிந்து விழுந்தார்கள்; நாங்களோ எழுந்து நிமிர்ந்து நிற்கிறோம்.
9 கர்த்தாவே, இரட்சியும்; நாங்கள் கூப்பிடுகிற நாளிலே ராஜா எங்களுக்குச் செவிகொடுப்பாராக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேவனுக்கு தூரமாகி விட்டேனா?

Am I away from God?

வாழும் சாட்சிகள்

Testimonies of God’s People

விடுதலை

ஆபாச பட அடிமைத்தனம்

இஸ்ரேல் – ஆய்வு கட்டுரை

(வேதாகம கால முதல் தற்போது வரை)

வேதாகம பண்டிகைகள்

(யூதர்களின் பண்டிகைகள்)

விசுவாச அறிக்கை

(தினமும் ஜெபிக்க சில அறிக்கைகள்)

நன்றியுடன் 21 நாட்கள்

December 2023

ஒரு வருட வேதாகம வாசிப்பு திட்டம்

2025 Chronological Bible Reading Plan