தாவீது

நியாயாதிபதிகள் காலம் முடிவடைந்த பிறகு, ராஜாக்களின் காலம் ஆரம்பித்தது. ஆதாம் பழம் சாப்பிட்டது தவறா? கீழ்ப்படியாதது தவறா? என்று ஏற்கனவே பார்த்தோம். அதேபோல தான், சவுல் ராஜாவும், தேவனுக்கு கீழ்ப்படியவில்லை என்பதே தேவ கோபத்துக்கு காரணமாக இருந்தது. எனவே சாமுவேல் மூலமாக தாவீதை ராஜாவாக அபிஷேகம் செய்கிறார். அதற்கு பின்பு, சவுலின் மேல், பொல்லாத ஆவி இறங்கும்போது, தாவீது சுரமண்டலம் வாசிப்பார், சவுல் சரியாகிவிடுவார். எனவே சவுல், தாவீதை மிகவும் நேசித்தார்.

இதற்கு பின்னர் தான், கோலியாத் யுத்தம் செய்ய வருகிறான். தாவீது சவுலிடமிருந்து, திரும்பி பெத்லகேமுக்கு போய் ஆடுகளை மேய்த்துக்கொண்டு இருக்கிறார். அதுவும் கொஞ்ச ஆடுகள் தான். 17-28ல், தாவீதின் அண்ணன், “அந்த கொஞ்ச ஆடுகளை நீ என்ன செய்தாய்” என்று கேட்கிறார். தாவீது ஏழை மேய்ப்பன் அல்ல, பணக்கார வாலிபன். எனவே தான், கொஞ்ச ஆடுகளை மேய்க்கிறார். அண்ணன்மாரை பார்க்க வருமிடத்தில், கோலியாத்தை பார்க்கிறார். அவரால், இருக்க முடியவில்லை. விருத்தசேதனம் என்பது உடன்படிக்கையின் அடையாளம். “தேவனோடு உடன்படிக்கை செய்திருக்கிற இஸ்ரவேலருக்கு விரோதமாக வருகிறாயா?” என்று கோபத்துடன் வந்து வெற்றி பெறுகிறார். தேவன் மேலுள்ள வைராக்கியம் தெரிகிறது. இப்போது நடப்பதை கவனியுங்கள்.

தாவீது ஜெயித்த பின்னர், சவுல் கேட்பது “நீ யார்?” எவ்வளவு கொடுமை அல்லவா! தாவீது மறக்கப்பட்டு போன ஒரு நபர். எந்த ராஜா, அவரை மிகவும் நேசித்து, அவருக்கு ஆயுததாரியாய் மாற்றினாரோ, அதே ராஜா, நீ யார் என்று கேட்கிறார். தாவீதும் மறுமொழியாக, நான் ஏற்கனவே உங்களுக்கு அறிமுகமானவன் என்று கூறவில்லை. தன் தகப்பன் பெயரையே சொல்கிறார். சில நேரங்களில் நாம் நன்மை செய்தாலும், மறக்கப்பட்டு போய்விட்டோமா? தாவீதுக்கே அந்த நிலை தான். மனிதன் மறக்கலாம், தேவன் நினைவுலிருந்து என்றும் அழியாது.

இந்த யுத்தம் முடிந்த பிறகு, மீண்டும் சவுல் தாவீதை, தன்னுடனே வைத்துக் கொண்டார். யோனத்தான் – தாவீது நட்பு, மிக அழகானது. யோனத்தான், தன் உயிரைப்போல சிநேகித்தார் என்று வேதம் கூறுகிறது. ‘சாமுவேல் தன்னை இஸ்ரவேலின் ராஜா என்று அபிஷேகம் செய்தார், இப்போது நான் சவுலிடம் திரும்ப வந்து விட்டேன். ஒருவேளை அரசனாகும் வாய்ப்பு இனி கிடைக்கும்’ என்று தாவீது நம்பி இருப்பார். சவுல், ‘கோலியாத்தை கொல்பவனுக்கு, தன் மூத்த மகள் மேராவை திருமணம் செய்து கொடுப்பேன்’ என்று சொல்லியிருந்தார். ‘ஒருவேளை, ராஜாவின் மருமகனாகி, நான் அடுத்த ராஜா ஆகலாமோ?’ என்று கூட யோசித்திருப்பார். ஆனால், சவுலோ, மேராவை வேறொருவனுக்கு திருமணம் செய்து வைத்தார்.

அதற்கு பின்பு, தாவீதும் யோனத்தானும் நண்பர்களாக இருந்தார்கள். ஏனோ, யோனத்தானுக்கு, தாவீதின் மீது அவ்வளவு அன்பு. பொதுவாக இஸ்ரவேலர், உடன்படிக்கை செய்தால் அதை விட்டு மாற மாட்டார்கள். உயிரைக் கொடுத்தாவது, உடன்படிக்கையைக் காப்பாற்றுவார்கள். நமது ஊரில் சொல்வார்களே, “உயிரே போனாலும், வாக்கு தவற மாட்டார்” என்று. அப்படித்தான் இஸ்ரவேலருக்கு உடன்படிக்கை.

சவுலும் யோனத்தானும் மரணமடைந்து விட்டார்கள். தாவீது சீயோன் கோட்டையை பிடித்தான், அதை தாவீதின் நகரமாக்கினான். உடன்படிக்கை பெட்டியை மீண்டும் எருசலேமுக்கு கொண்டு வந்தான். இப்போது, அவன் கேட்ட கேள்வி, “யோனத்தானுக்காக நான் யாருக்காவது தயை செய்யுமளவுக்கு, யாராவது உயிருடன் இருக்கிறார்களா?” தாவீது, தன் நட்பில், எவ்வளவு உண்மையுள்ளவர் என்பதை இதில் அறியலாம். இரண்டு காலும் முடமான ஒரு பிள்ளை இருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்டு, மேவிபோசேத்தை அழைத்து, எருசலேமுக்கு வரவைத்து, சவுலுக்கு சொந்தமான எல்லா நிலத்தையும் அவனுக்கு திரும்பக் கொடுத்து, தினமும் தன்னுடன் ராஜ விருந்தில் சாப்பிட வைத்தார் தாவீது.

2 சாமுவேல் 5: 6,7,8 வாசித்தால், எபூசியருக்கு விரோதமாக யுத்தம் பண்ண போனார் தாவீது. அவரை நோக்கி, “உனக்கு நாங்க எல்லாம் தேவையில்லை, எங்க கிட்ட இருக்கிற சப்பாணிகள்(2 காலும் முடமானவர்கள்), குருடர்களே போதும், அவர்களே உன்னை விரட்டியடிப்பார்கள்” என்று கூறுகிறார்கள். எனவே அந்த இடத்தை ஜெயித்தவுடன், சப்பாணிகள் உள்ளே வர தடை என்று தாவீது கூறியிருப்பார். ஆனால், மேவிபோசேத் முடவனாக இருந்தாலும், ராஜாவின் பந்தியில் சாப்பிடும் சிலாக்கியத்தைக் கொடுத்தார் தாவீது. இதுதான் இஸ்ரவேலர்கள். அவர்கள் செய்த உடன்படிக்கைக்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள். இன்றும் இஸ்ரவேலர் மத்தியில், middle east நாடுகளில், Covenant (உடன்படிக்கை) செய்யும் பழக்கம் இருக்கிறது. வேறொரு பதிவில் உடன்படிக்கை பற்றி படிக்கலாம்.

இப்படி தன் நண்பனாகிய யோனத்தானுக்கு செய்த உடன்படிக்கையில் தாவீது உண்மையுள்ளவராக இருந்தார். தாவீதின் மகன் அப்சலோம், தன் தகப்பனாகிய தாவீதுக்கு விரோதமான காரியங்களைச் செய்கிறார். தாவீது அப்சலோமுக்கு பயந்து ஊர் ஊராக ஓடிக்கொண்டிருக்கும்போது, மேவிபோசேத் செய்த காரியம் பயங்கரமானது.

தாவீது உயிருக்கு பயந்து ஓடிப்போகும்போது, மேவிபோசேத், தன் தாத்தா சவுலின் ஆட்சி, இனி தன் கையில் வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறான். நன்றி மறந்த மேவிபோசேத் ஆக மாறிவிட்டான். தான் எப்படிப்பட்ட நிலையில் இருக்கும்போது, தன்னை தாவீது அழைத்து, தனக்கு ராஜ மேன்மை கொடுத்தார் என்பதை மறந்து போனார்.

தாவீதின் நாளில் 3 வருஷம் பஞ்சம் வருகிறது. சவுல் வீட்டார் கிபியோனியருக்கு செய்த தீங்குக்காக இந்த பஞ்சம் என்று தேவன் கூறினார். எனவே தாவீது, கிபியோனியரை அழைத்து, என்ன செய்ய வேண்டும் என்று கேட்கிறார். சவுலின் குமாரர்(பேரன்) 7 பேர் எங்களுக்கு வேண்டும், நாங்கள் அவர்களை தூக்கில் போட வேண்டும் என்று கேட்கிறார்கள்.  அப்போது தாவீது, மிகவும் அழகான ஒரு விஷயம் செய்வார்.

தாவீது, தன் உயிரைக் காப்பாற்ற ஓடுகிறபோது, ‘நான் இனி ராஜாவாவேன்’ என்று சொன்ன மேவிபோசேத்தை தப்ப விட்டு, வேறே 7 பேரைக் கொடுக்கிறார். தன்னை எதிர்த்தவன் என்று மேவிபோசேத்தை பார்க்கவில்லை. தன் ‘நண்பன் யோனத்தானுக்கு உடன்படிக்கை செய்து இருக்கிறேன், எனவே மேவிபோசேத்தைக் காப்பாற்றுவேன்’ என்று செய்கிறார். இதுதான் தாவீதின் இருதயம். இதுதான் தேவனுக்கேற்ற இருதயம். இப்படி ஒவ்வொரு காரியத்தையும் தனித்தனியாக படித்து பார்த்தால், தாவீதின் இருதயம் நன்றாக புரியும்.

முக்கிய இடங்கள்

தாவீது தன் வாழ் நாளில், தங்கியிருந்த 5 இடங்கள் முக்கியமானவை. அவற்றை பற்றி இப்போது பார்க்கலாம்.

  1. பெத்லகேம்

 

தாவீதின் இளமைக் காலத்தில், அவர் வாழ்ந்த இடம் பெத்லகேம். தாவீதின் பிறந்த இடத்தில்தான், நம் கர்த்தராகிய இயேசுவும் பிறந்தார். இந்த பெத்லகேமில் தான் தாவீது ஆடு மேய்த்தார். சாமுவேல் அபிஷேகம் செய்ய வந்தது பெத்லகேமுக்கு தான். தாவீது தன் இளமையில் தேவன் மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்த இடம் பெத்லகேம் தான். சாமுவேல், தாவீதை ராஜாவாக சிறு வயதில் அபிஷேகம் செய்தது இங்கேதான். சாமுவேல் தாவீதை அபிஷேகம் செய்தபோது, தாவீதுக்கு 17 வயது. தாவீது இஸ்ரவேலின் அரசராகும்போது, தாவீதுக்கு 37 வயது. கிட்டத்தட்ட 20 வருடங்கள், தாவீது, தன் தரிசன நிறைவேறுதலுக்காக காத்திருந்தார்.

2. கிபியா

சவுல் ராஜாவின் இடம் கிபியா. பெலிஸ்தர் சவுலுக்கு எதிராக கோலியாத்தை அனுப்பும்போது, கோலியாத்தை வீழ்த்தியவர் தாவீது. அதற்கு பின்பு, சவுல் தாவீதை தன்னுடன் வைத்துக் கொண்டார்.

எனவே, அதற்கு பின்பு, தாவீது இருந்த இடம், கிபியா. 17 வயது வரை, பெத்லகேமில் இருந்த தாவீது, பின்னர் 18 முதல் 22 வயதில் கிபியாவில் இருந்தார். கோலியாத்தை கொன்றதினால் வந்த பாராட்டும், சவுல் ராஜாவின் மகள் மீகாளை திருமணம் செய்ததால் வந்த மரியாதையும், கொஞ்ச நாட்களுக்கு தாவீதுக்கு கிடைத்தது.

3. அதுல்லாம்

தாவீதுடைய வாழ்வில், அதுல்லாம் குகையில் இருந்த 7 வருடங்கள் முக்கியமானது. தனது 23 வயது முதல் 30 வயது வரை, தாவீது அதுல்லாம் குகைகளில் தான் இருந்தார். சவுலுக்கு தப்பி ஓடிப்போன இடம் இந்தக் குகை. இந்த 7 வருடங்களில், வனாந்திர வாழ்க்கை தான் தாவீதுக்கு.  இஸ்ரேல் வரைபடத்தை வைத்து, இஸ்ரேல் தேசத்தை தாவீது அறியவில்லை. இஸ்ரேலின் ஒவ்வொரு குகை முதற்கொண்டு பல இடங்களில் ஒளிந்து, இஸ்ரேலை முழுமையாக சுற்றினார். நல்ல தலைமைத்துவ அனுபவம் (Leadership Experience) தாவீதுக்கு இங்கே கிடைத்தது. தன்னிடம் வந்த ஒடுக்கப்பட்டவர்களை, யுத்தம் செய்யும் ஆட்களாக மாற்றி, பராக்கிரமசாலிகளாக மாற்றியவர் தாவீது. முறுமுறுக்கிறவர்களை கூட வைத்துக்கொண்டு, நல்ல தலைவராய் உருவானவர் தாவீது.

4. எப்ரோன்

தாவீது கர்த்தரிடம், எந்த இடத்துக்கு போகலாம் என்று கேட்டபோது, எப்ரோனுக்கு போ என்று கர்த்தர் சொன்னார். எப்ரோனுக்கு போகும்போது அவனுக்கு இரண்டு மனைவிகள். எப்ரோனில், தனது 30 முதல் 37 வயது வரை இருந்தார் தாவீது. தாவீதின் வாக்குதத்தம் 12 கோத்திரங்களை அரசாட்சி செய்வது. தாவீதுக்கு எப்ரோனில் யூத கோத்திரத்தை மட்டும் ஆட்சி செய்யும் வாய்ப்பு வந்தது. 12 கோத்திரமும் ஆட்சி செய்வாய் என்ற வாக்கு நிறைவேற 7 வருடங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது.

 எப்ரோனில் தாவீதுக்கு மனைவிகள், ஆறு பேர். தாவீதின் மனைவிகள் என்ற பெயரில், சவுலின் மகள் மீகாள் சொல்லப்படவில்லை. எனவே அவளையும் சேர்த்தால் ஏழு பேர். ஆனால் அவள் வேறொருவனுக்கு மனைவியாக கொடுக்கப்பட்ட படியால், மீகாள் தாவீதின் மனைவி அல்ல.

5. எருசலேம்

தாவீது படைக்கப்பட்ட நோக்கமே எருசலேமை உருவாக்குவது தான் என்று யூதர்கள் நம்புகிறார்கள். எருசலேம் தேவனின் கனவு. அதை பூமிக்கு கொண்டு வந்தவர் தாவீது. தனது 37 வயது முதல், தான் மரிக்கும் 70 வயது வரை அவர் எருசலேமில் தான் இருந்தார். எருசலேமிலிருந்து, முழு 12 கோத்திரத்தையும், இஸ்ரேல் தேசமாக அரசாண்டார். எருசலேமில்தான் அவருக்கு பத்சேபாள் சொந்தமானாள். முந்தைய பதிவில் பார்த்த நாத்தான், சாலமோன் என்பவர்கள், தாவீதுக்கு எருசலேமில் பிறந்தவர்கள்.

இவையே தாவீதின் வாழ்நாளின் முக்கியமான இடங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *