தாவீது -2 (உடன்படிக்கை பெட்டி மேலோட்டம்)

ஏற்கனவே தாவீதைப் பற்றி, பத்சேபாள் பதிவிலும், தாவீது முதல் பதிவிலும் பார்த்தோம். தாவீது 17 வயது வரை பெத்லகேமில் இருந்தார், 22 வயது வரை கிபியாவில் சவுலுடன் இருந்தார், 30 வயது வரை அதுல்லாம் குகைகளில் முறுமுறுக்கிறவர்கள், கடன்பட்டவர்கள், ஓடிவந்தவர்களோடு இருந்து, அவர்களுக்கு யுத்தம் சொல்லிக்கொடுத்தார். 37 வயது வரை எப்ரோனிலிருந்து யூதா கோத்திரத்தை ஆட்சி செய்தார். பின் உயிரோடிருந்த 70வயது வரை எருசலேமில் இருந்தார் என்று பார்த்தோம். தாவீது எருசலேமில் இருந்தார், சீயோனில் இருந்தார் என்றெல்லாம் வேதத்தில் பார்க்கிறோம். அதைப்பற்றி இன்று சற்று விரிவாக பார்க்கலாம். சீயோன் ஏன் முக்கியமானது? தாவீதுக்கும் சீயோனுக்கும் என்ன சம்பந்தம் என்பதைப் பார்க்க இருக்கிறோம். தாவீதுக்கும் உடன்படிக்கை பெட்டிக்கும் என்ன சம்பந்தம் என்பதைப் பார்க்க இருக்கிறோம். முதலாவதாக, உடன்படிக்கை பெட்டியை பற்றி மேலோட்டமாக இன்று காணலாம்.

நாம் ஏற்கனவே ஒரு பதிவில் ஆசரிப்புக்கூடாரம்(Tabernacle) பற்றி பார்த்தோம். தேவனோடு ஏற்கனவே உடன்படிக்கை செய்திருந்தார்கள், இஸ்ரவேலர். உடன்படிக்கை என்னவென்றால், நியாயப்பிரமாணத்தை முழுமையாக கடைபிடிப்போம் என்பதே. ஆனால் மக்களால் அதை கடைபிடிக்க முடியவில்லை. அதற்கு பரிகாரமாக தேவன் கொண்டுவந்ததே ஆசரிப்புக்கூடாரம். ஆசரிப்புக்கூடாரத்தில் பலிகள் செலுத்தி, தேவனோடு ஒப்புரவாக முடியும். ஆசரிப்புக்கூடாரத்தில், உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் உள்ளது. வெளிப்பிரகாரத்தில், வெண்கல பலிபீடமும், வெண்கல தண்ணீர் தொட்டியும் உள்ளது. உட்பிரகாரத்தில் இரு பிரிவுகள் உள்ளன. பரிசுத்த ஸ்தலம்(Holy Place), மகா பரிசுத்த ஸ்தலம்(Most Holy Place) என்ற இரு பிரிவுகள். 

உட்பிரகாரத்தின் இரு பிரிவுகளான, பரிசுத்த ஸ்தலம், ,மகா பரிசுத்த ஸ்தலத்துக்கு இடையே ஒரு பெரிய திரைச்சீலை இருக்கும். பரிசுத்த ஸ்தலத்தில் குத்து விளக்கு, சமூக அப்பத்து மேசை, தூபபீடம் இருக்கும். மகா பரிசுத்த ஸ்தலத்தில், உடன்படிக்கை பெட்டி இருக்கும். இந்த அமைப்பு ஏற்கனவே நாம் வேதத்தில் அறிந்ததே. கர்த்தருக்கு சித்தமானால், இதைப்பற்றி தனியாக ஒரு பிரிவில் படிக்கலாம். இன்று நாம் பார்க்க இருப்பது, உடன்படிக்கை பெட்டி. இந்த உடன்படிக்கை பெட்டியை, தாவீது என்ன செய்தார், பெட்டி எங்கெல்லாம் பயணம் செய்தது என்று பார்க்கலாம்.

உடன்படிக்கை பெட்டியை மேலே படத்தில் பார்க்கலாம். பெட்டியின் மூடியில் இரண்டு கேருபீன்கள், செட்டைகளை வைத்து, மறைத்து இருப்பதை போல இருக்கும். இந்த பெட்டியின் மூடிக்கு பெயர் தான் கிருபாசனம். கிருபாசனத்தண்டையில் வருகிறோம் என்று, நாம் சொல்வது, மகா பரிசுத்த ஸ்தலத்துக்குள் வருகிறோம் என்று அர்த்தம். பிரதான ஆசாரியன் மட்டும், அதுவும் வருடத்துக்கு ஒருமுறை, பல நாட்கள் தங்களை சுத்திகரித்துக்கொண்டு, சில நிமிடங்கள் மட்டுமே செல்ல முடியும் இந்த கிருபாசனம் அருகில். இந்த கேருபீன்கள் நடுவிலிருந்து தேவன் மோசேயிடம் பேசினார். மோசே தேவனோடு பேச, கிருபாசனம் அருகே செல்ல வேண்டும். ஆனால் இப்போது, நாம் நினைத்த நேரத்தில், நினைத்த இடத்தில் தேவனோடு பேசுகிறோம். இயேசுவின் இரத்தம் நமக்கு இருக்கிறது. எவ்வளவு பாக்கியம் பெற்றவர்கள் அல்லவா நாம்! இந்த பெட்டியின் கீழ்ப்பக்கத்தில் கொக்கி போன்ற வளையம் இருக்கும். பெட்டியை வனாந்தரத்தில் பிரயாணத்தில் தூக்கி செல்ல வசதியாக இந்த வளையம் இருக்கும். பெட்டியை யாரும் கையால் தொடக்கூடாது, உண்மையை சொல்ல வேண்டுமானால், கையால் தொட்டால் செத்துவிடுவர். எனவே, பொன்னால் செய்த அந்த கம்புகளை, வளையத்துக்குள் விட்டு, கம்பை பிடித்துதான் தூக்கி செல்வர். முக்கியமான விஷயம் என்னவென்றால், லேவி கோத்திரத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தான் தூக்க முடியும்.

இந்த உடன்படிக்கை பெட்டி எதற்காக? பாவ நிவிர்த்தி பண்டிகை பார்த்தோம் அல்லவா! வருடத்தில் ஒருமுறை மட்டும் பிரதான ஆசாரியன் மகா பரிசுத்த ஸ்தலத்துக்கு சென்று, இரத்தத்தை தெளிப்பார் அல்லவா! அது இந்த உடன்படிக்கை பெட்டியின் மீதுதான். இதன் மீது இரத்தம் தெளிக்கப்படும்போது, அதுவரை செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.

ஒருவன் பாவம் செய்யும்போது, நியாயப்பிரமாணத்தை மீறினவன் ஆகிவிட்டான். ஆனால் தேவன் அவனுக்கு கிருபையாக ஆசரிப்பு கூடாரம் கொடுத்து, பலிகளை கொடுத்து, பண்டிகைகளைக் கொடுத்து, அதன் மூலம் தேவனோடு மனிதனை ஒப்புரவாக்கினார். அவன் செய்த பாவங்களை மன்னிப்பதற்காக கொடுக்கப்பட்ட பண்டிகை தான் பாவ நிவிர்த்தி பண்டிகை. அதன்பின் மனிதன் பாவம் செய்யக்கூடாது. ஆனால் பழைய ஏற்பாட்டு மனிதர்களால் அப்படி வாழ முடியவில்லை. எனவே ஒவ்வொரு வருடமும் மீண்டுமாக பாவம் செய்து விட்டு, தேவனோடு மீண்டும் ஒப்புரவாகும்படி, பாவ நிவிர்த்தி பலியை செலுத்துவார்கள்.

ஒரு மனிதன் ஆசரிப்பு கூடாரத்துக்குள் செல்ல வேண்டுமானால், கையில் பலி இருக்க வேண்டும். காளையோ, ஆடோ கொண்டு செல்ல வேண்டும். அப்போது ஆசாரியன், ஆட்டை மட்டும் தான் செக் செய்வார், ஏதேனும் பழு இருக்கிறதா என்று. வந்த மனிதன் பாவியோ, கொலைகாரனோ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. கையில் வைத்திருக்கும் ஆடு பழுதற்ற ஆட்டுக்குட்டியாக இருக்க வேண்டும். இன்று நாமும் ஜெபிக்க தொடங்கும்போது, நம் பலியாக, பழுதற்ற ஆட்டுக்குட்டியான இயேசுவை வைத்திருக்கிறோம். அன்று பழைய ஏற்பாட்டில், பல முறை, பலி செலுத்திக்கொண்டே இருந்தார்கள். ஆனால் இன்று, நமக்கான பலி ஒரே தரமாக செலுத்தப்பட்டு முடிந்தது. நாம் எவ்வளவு பாக்கியம் பெற்றவர்கள்.

உடன்படிக்கை பெட்டிக்குள் என்ன இருக்கும்?

உடன்படிக்கை பெட்டிக்குள், பத்து கற்பனைகள் எழுதப்பட்ட இரண்டு கற்பலகையும், ஆரோனுடைய துளிர்த்த கோலும், மன்னா வைக்கப்பட்ட பொற்பாத்திரமும் இருந்தது. ஆனால் இந்த பெட்டியை யாரும் திறக்க மாட்டார்கள். பெட்டியின் மூடியில், கேருபீன்களுக்கு மத்தியில், தேவ பிரசன்னம் இருந்ததால், யாராலும் பெட்டியை தொட முடியாது.

உடன்படிக்கை பெட்டியை பற்றின மேலோட்டம் இவைகள். இந்த உடன்படிக்கை பெட்டிக்கும் தாவீதுக்கும் என்ன சம்பந்தம்? உடன்படிக்கை பெட்டி எங்கே எல்லாம் பயணித்தது? என்பதைப் பற்றி, வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *