இஸ்ரவேலுக்கு ராஜா
சாமுவேல் இஸ்ரவேலின் கடைசி நியாயாதிபதி என்று பார்த்தோம். சாமுவேல் தனக்கு அடுத்ததாக தன் பிள்ளைகளை நியாயாதிபதியாக வைக்கிறார். ஆனால் அது தேவ சித்தம் அல்ல. இன்றைக்கு ஊழியர்கள் கூட அந்த தவறை செய்கிறார்கள். தங்களுக்கடுத்து தங்கள் பிள்ளைகளை ஊழியத்தில் ஏற்றுகிறார்கள். நிச்சயமாக அப்பாவின் அபிஷேகம் பிள்ளைகள் மீது இருக்கும். ஆனால், கர்த்தருடைய அழைப்பு இருக்கிறதா என்பதை சரிபார்த்து, ஊழியத்துக்கு வரவேண்டும். இதுவரை நியாயாதிபதிகளாய் இருந்தவர்கள், வேறு வேறு கோத்திரத்திலிருந்து வந்தார்கள். அவர்களையும் தெரிவு செய்தவர் கர்த்தர். ஆனால் சாமுவேலோ, தனக்கு பின் தன் பிள்ளைகள் என்று அரசியலை உள்ளே கொண்டு வந்தார்.
1 சாமுவேல் 8
1.சாமுவேல் முதிர்வயதானபோது, தன் குமாரரை இஸ்ரவேலின்மேல் நியாயாதிபதிகளாக வைத்தான்.
2.அவனுடைய மூத்தகுமாரனுக்குப் பெயர் யோவேல், இளையவனுக்குப் பெயர் அபியா; அவர்கள் பெயெர்செபாவிலே நியாயாதிபதிகளாயிருந்தார்கள்.
3.ஆனாலும் அவனுடைய குமாரர் அவன் வழிகளில் நடவாமல், பொருளாசைக்குச் சாய்ந்து, பரிதானம் வாங்கி, நியாயத்தைப் புரட்டினார்கள்.
4.அப்பொழுது இஸ்ரவேலின் மூப்பர் எல்லாரும் கூட்டங்கூடி, ராமாவிலிருந்த சாமுவேலினிடத்தில் வந்து;
5.இதோ, நீர் முதிர்வயதுள்ளவரானீர்; உம்முடைய குமாரர் உம்முடைய வழிகளில் நடக்கிறதில்லை; ஆகையால் சகல ஜாதிகளுக்குள்ளும் இருக்கிறபடி, எங்களை நியாயம் விசாரிக்கிறதற்கு, ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்றார்கள்.
ஆனால் சாமுவேலின் பிள்ளைகள் சாமுவேலைப் போல இல்லாமல், லஞ்சம் வாங்கி காரியங்களை நடப்பித்ததால், மக்கள் கோபம் கொண்டனர். இதுவரை தேவனுடைய ஆளுகைக்கு கீழாக இருந்தவர்கள், இப்போது “தங்களுக்கு ஓரு ராஜா வேண்டும்” என்று கேட்டார்கள். தேவனுடைய திட்டம் தாவீதை ராஜாவாக்குவது தான். ஆனால், மக்கள் தேவன் குறித்த காலத்துக்கு முன்பே கேட்க ஆரம்பித்து விட்டார்கள். எனவே தான் தேவன் சவுலை ராஜாவாக்கினார்.
தாவீதை தான் ராஜாவாக்க வேண்டும் என்று தேவன் முடிவு செய்து இருந்தால், தாவீது சிறு வயது என்பதால், அவருடைய தந்தையாகிய ஈசாயை ராஜாவாக்கி இருக்கலாமே! அல்லது, அதே யூத கோத்திரத்தில் வேறு யாரையாவது ராஜாவாக்கி இருக்கலாமே! ஏன் வெளியே, பென்யமீன் கோத்திரத்தில் சவுலை தேர்ந்தெடுக்க வேண்டும்? இப்படி அனேக நாட்கள் யோசித்தது உண்டு. தேவனுடைய திட்டங்களும், அவருடைய நியாயங்களும் நம்மால் புரிந்து கொள்ள முடியாது.
வேதவல்லுநர்கள் கருத்துப்படி, மற்றவர்கள் கூறுவது போல தாவீது ஏழை மேய்ப்பன் அல்ல. பெரிய பணக்காரர். போவாஸ் என்பவர், ரூத்தின் சரித்திரத்தில் படிக்கும்போது, அவர் ஒரு பணக்காரர் என்பது தெரியும். அதே வேளையில் நகோமியும், தன் கையில் கணவனாகிய எக்லோன், பிள்ளைகளாகிய மக்லோன் கிலியோன் என்பவர்களுடைய நிலத்தை வைத்திருந்தாள். எனவே ரூத்தை திருமணம் செய்ததன் மூலம், அந்த ஏரியாவிலேயே பெரிய பணக்காரர் ஆகியிருப்பார் போவாஸ்.
21.சல்மோன் போவாசைப் பெற்றான்; போவாஸ் ஓபேதைப் பெற்றான்.
22.ஓபேத் ஈசாயைப் பெற்றான்; ஈசாய் தாவீதைப் பெற்றான்.
ரூத் 4: 21,22
ரூத்தின் புத்தகத்தில் வாசிக்கும்போதே, போவாஸ்க்கு ஊரில் செல்வாக்கு இருந்தது புரியும். எனவே போவாஸ்க்கு பின்னர் வந்த அவருடைய சந்ததியும் செல்வாக்கானவர்களாக இருந்திருப்பார்கள். அப்படியெனில், ஈசாயும் செல்வாக்கானவர் தானே! கர்த்தர் ஈசாயை ராஜாவாக்கி இருக்கலாமே! ஏன் செய்யவில்லை?
2.வேசிப்பிள்ளையும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.
3.அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.
உபாகமம் 23: 2,3
கர்த்தர் சபைக்குள் மோவாபியர்கள் அல்லது வேசி பிள்ளைகள் வர வேண்டுமானால், பத்து தலைமுறை கடந்து தான் வர முடியும் என்று கூறியிருக்கிறார். முதலாவது ரூத். பரிசுத்த வித்து கடந்து வருகிற சந்ததியில், இஸ்ரேல் தேசத்தில், ரூத் இணைந்தார். யார் இந்த மோவாபியர்கள்? லோத்தின் காலத்துக்கு சென்றால், லோத்து மகளுடன் இணைந்து பெற்ற குழந்தைகள் தான், அம்மோனியரும் மோவாபியரும்.
36.இவ்விதமாய் லோத்தின் குமாரத்திகள் இருவரும் தங்கள் தகப்பனாலே கர்ப்பவதியானார்கள்.
37.மூத்தவள் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு மோவாப் என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற மோவாபியருக்குத் தகப்பன்.
38.இளையவளும் ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குப் பென்னம்மி என்று பேரிட்டாள்; அவன் இந்நாள்வரைக்கும் இருக்கிற அம்மோன் புத்திரருக்குத் தகப்பன்.
ஆதியாகமம் 19
ரூத் இப்போது இஸ்ரேலில் இணைய, 10 தலைமுறை கணக்கு முடிந்திருக்குமா? கீழ்கண்ட அட்டவணையில் பார்த்தால், போவாஸ் பத்து தலைமுறை முடிந்த சந்ததி என்பது புரியும். ஆபிரகாமும் லோத்துவும் ஒரே கால கட்டத்தில் வாழ்ந்ததால், ஆபிரகாமின் சந்ததியை வைத்து கணக்கீடு செய்து இருக்கிறோம். லோத்துவின் பிள்ளைகள் பெரியவர்கள், ஆபிரகாமுக்கு தாமதமாக குழந்தை பிறந்தது என்று எடுத்துக்கொண்டாலும், போவாஸ் ரூத்தை திருமணம் செய்யும்போது கிழவன் என்று தான் வேத அறிஞர்கள் கூறுகிறார்கள். எனவே, ரூத் உள்ளே நுழைந்தது, பத்து தலைமுறை முடிந்த பிறகே என்பது புரிகிறது.
சந்ததி பெயர் 1 ஆபிரகாம் 2 ஈசாக்கு 3 யாக்கோபு 4 யூதா 5 பாரேஸ் 6 எஸ்ரோன் 7 ராம் 8 அமினதாப் 9 நகசோன் 10 சல்மோன் 11 போவாஸ் நாம் இப்போது, ஏன் ஈசாய் ராஜாவாகவில்லை என்று பார்த்துக் கொண்டு இருக்கிறோம். “வேசிப்பிள்ளையும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; அவனுக்குப் பத்தாம் தலைமுறையானவனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.” யூதாவின் மகன் பாரேஸ் எப்படி பிறந்தார்? யூதா மருமகளை வேசி என்று நினைத்து அவளிடம் சேர்ந்ததால்தானே! எனவே பாரேஸ்ம் வேசிப்பிள்ளை தான். நம் தேவனை புரிந்து கொள்ளவே முடியாது. அவருடைய பார்வையில் யூதாவின் பிள்ளைகள் வேசிப்பிள்ளைகளாக தெரிந்து இருந்தால், அவர்கள் சந்ததியில் பரிசுத்த வித்து வந்திருக்க முடியாது. வேசிப்பிள்ளையாக பார்க்கவில்லை என்றால், தேவனால் ஈசாயையே ராஜாவாக்கியிருக்க முடியும். அவருடைய பார்வைதான் என்ன? மனிதன் பார்க்கிற பிரகாரம் நான் பார்க்கமாட்டேன் என்று கூறினார் அல்லவா! நம்மால் நிச்சயம் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் அவர் கிருபை உள்ளவர், அதே சமயம் நீதியும் உள்ளவர் என்பதை புரிந்து கொள்ளலாம்.
சந்ததி பெயர் 1 யூதா 2 பாரேஸ் 3 எஸ்ரோன் 4 ராம் 5 அமினதாப் 6 நகசோன் 7 சல்மோன் 8 போவாஸ் 9 ஓபேத் 10 ஈசாய் 11 தாவீது தேவனுடைய திட்டம், பதினொன்றாவது தலைமுறை தாவீதை ராஜாவாக்குவது தான். ஆனால், மக்கள் அதற்கு முன்பாகவே ராஜா கேட்டதால், யூதா கோத்திரத்தை விட்டு வெளியே பென்யமீன் கோத்திரத்தில் சவுலை தெரிந்து கொண்டார். இஸ்ரேலின் முதல் ராஜாவாகிய சவுலை பற்றி வரும் பதிவுகளில் படிக்கலாம்.
Leave a Reply