இஸ்ரவேலர் எகிப்தில் வாழ்ந்த காலம் 430 வருஷம்.(யாத்திராகமம்12- 40), வனாந்திரத்தில் 40 வருஷம். கானானுக்குள் வந்ததிலிருந்து யோசுவா மரிக்கும் காலம் வரை தோராயமாக 25 வருஷம். யோசுவா மரித்ததிலிருந்து சவுல் ராஜாவாகும் வரை உள்ள இடைப்பட்ட இந்த காலத்தில், 15 நியாயாதிபதிகள் எழும்பினர். இந்த காலங்களில், அதாவது ஏலியின் காலம் வரையும், அவர்கள் மொத்தமாக இஸ்ரேல் என்னும் ஒரே தேசமாக இருக்க மாட்டார்கள். ஒவ்வொரு கோத்திரம் கோத்திரமாகத்தான் இருந்தார்கள். இந்த இடைப்பட்ட காலங்களில், அவர்களுக்குள்ளாகவே அடித்துக் கொள்வார்கள். உதாரணத்துக்கு ‘இசக்கார் கோத்திரத்துக்கும் பென்யமீன் கோத்திரத்துக்கும் சண்டை’ என்பது போல்தான் இருந்தார்கள். அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழவில்லை. ஏனெனில் மொத்தமாக எல்லா கோத்திரத்தையும் இணைத்து ஆளும்படி, ஒரு ஆளுகை அங்கே இல்லை. தனித்தனியாக வாழ்ந்தார்கள். ஏதேனும் பிரச்சனை வந்தால், கர்த்தர் ஏதேனும் ஒரு கோத்திரத்திலிருந்து ஒரு நியாயாதிபதியை எழுப்புவார். விடுதலை கிடைக்கும். அவர்கள் கீழ் தேசம் இருக்கும். அவர் காலத்துக்கு பின், மீண்டும் மேய்ப்பன் இல்லாத மந்தை ஆகிவிடுவார்கள்.
தங்களுக்கென்று சொந்த இடம் கிடைத்ததும், இஸ்ரவேல் மக்கள், ஆண்டவரை விட்டு வழிவிலகினர். ஆனால் கிருபை உள்ள ஆண்டவரோ, அவர்களை அடிக்க மாட்டார். அதற்குப் பதிலாக அவர்கள் மீது இருந்த தன்னுடைய பாதுகாப்பின் கரத்தை எடுத்து விடுவார். ஆண்டவருடைய பாதுகாப்பு போனதும், அருகில் இருக்கும் ராஜாக்கள் இஸ்ரவேலுக்குள் வந்துவிடுவார். அந்த நியாயாதிபதிகள் கால கட்டத்தில், ஒரு ராஜா கூட இஸ்ரவேலை அடிமையாக வெளியே கூட்டிக் கொண்டு போகவில்லை. இஸ்ரவேலரை, இஸ்ரவேலிலே அடிமைப்படுத்தி வைத்திருப்பர். அறுக்கும் போது தானியங்களை அள்ளிக் கொண்டு போவது, அழகான பெண் பிள்ளைகளை தூக்கிக் கொண்டு போவது, வாட்டசாட்டமான ஆண் பிள்ளைகளை தூக்கிக் கொண்டு போவது என்பது போல அட்டகாசம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களை நாடு கடத்தவில்லை. இஸ்ரவேலின் கடைசி நியாயாதிபதி சாமுவேல். சாமுவேல் தான் மக்களை ஒன்றுசேர்த்து ஒரே தேசமாக்கினார்.
சாமுவேல் நியாயாதிபதியாகும்போது தேசம் ஆண்டவரின் கோபத்தில் இருந்தது. மக்கள் தேவனை மறந்து விட்டு தங்களுக்குத் தோன்றியபடி வாழ்க்கையை வாழ்ந்தனர். எடுத்துக்காட்டாக, ஏலியின் மகன்கள், ஆலயத்தில் ஆண்டவருக்கு பிரியமில்லாத காரியம் செய்தார்கள். நன்றாக ஆட்டம் போட்டுவிட்டு, யுத்தத்துக்குப் போகும்போது உடன்படிக்கை பெட்டியைத் தூக்கிக் கொண்டு போனார்கள் ஏலியின் மகன்கள். யோசுவாவின் காலத்தில், உடன்படிக்கை பெட்டியை தூக்கி சென்ற ஆசாரியரின் கால்கள், தண்ணீரில் பட்டமாத்திரத்தில், யோர்தான் பிரிந்து நின்றது. அதையே யுத்தத்திலும் பயன்படுத்தி பார்த்தார்கள். ஆனால் உடன்படிக்கை பெட்டி அவர்கள் தேசத்தை விட்டு சென்றது தான் மிச்சம். ஆனாலும் தேவன், உடன்படிக்கை பெட்டி அவ்விடத்திலிருந்து செல்லும்போது, தம் தாசனாகிய சாமுவேலை தீர்க்கதரிசியாக எழுப்பிவிட்டு, அதாவது இஸ்ரவேலுக்கு ஒரு தீர்க்கதரிசியை கொடுத்துவிட்டுதான் உடன்படிக்கை பெட்டி வெளியேபோக நடத்தினார். ஏதேனும் ஒரு தொடர்பு இஸ்ரவேலருடன் இருப்பதையே தேவன் விரும்பினார். இன்று நம்முடனும் தொடர்பில் இருக்கவே தேவன் விரும்புகிறார். கடைசியாக சாமுவேல் நியாயாதிபதியாகி, முழு தேசத்தையும் மனம் திரும்புதலுக்குள் கொண்டு வந்தார். எப்படி கொண்டு வந்தார்? முதன் முதலில் வேதாகமப் பள்ளி ஆரம்பித்தவர் சாமுவேல். சாமுவேல் தான் மூன்று இடங்களில் வேதாகம கல்லூரி ஆரம்பித்தார்.
நாம் ஏற்கனவே பார்த்தபடி, தேசம் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு கோத்திரத்திலும் வடக்கு மேற்கு தெற்கு கிழக்கு பகுதிகளில் ஒரு லேவியப்பட்டணம் கட்டிக் கொடுக்கப்பட்டது, எனவே ஒரு கோத்திரத்துக்கு நான்கு லேவியப்பட்டணங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டது.
மொத்த தேசத்தையும் மூன்று பகுதிகளாகப் பிரித்தார் சாமுவேல். பன்னிரண்டு கோத்திரத்தையும் மூன்றாகப் பிரித்தால், நான்கு கோத்திரம் ஒரு பகுதியில் இருக்கும். மேல் பகுதி, நடுப்பகுதி, கீழ்ப்பகுதி. மேல் பகுதியில் கில்க்கால் என்ற இடத்தில் வேதாகமப் பள்ளியும், நடுப்பகுதியில் பெத்தேல் என்ற இடத்தில் வேதாகமப் பள்ளியும், கீழ்ப்பகுதியில் மிஸ்பா என்ற இடத்தில் வேதாகம கல்வியும் ஆரம்பித்தார்.
மொத்தம் 12 கோத்திரத்தை 3 பகுதிகளாக பிரித்தால், ஒரு பகுதிக்கு 4 கோத்திரம் வரும். (4*3=12). ஒரு கோத்திரம் மட்டும் எடுத்தால், அதாவது பென்யமீன் கோத்திரம் மட்டும் எடுத்துக்கொண்டால், அதன் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு பகுதிகளில் ஒரு லேவிய பட்டணம் என்பதனால், பென்யமீன் கோத்திரத்துக்கு மட்டும் 4 லேவிய பட்டணங்கள் இருக்கும். உதாரணத்திற்கு, கீழ் பகுதியில், பென்யமீன் கோத்திரம், யூதா கோத்திரம் மற்றும் சிமியோன் கோத்திரம், ரூபன் கோத்திரம் இருக்கிறது என்று வைத்துக் கொள்ளலாம். ஒரு கோத்திரத்துக்கு 4 லேவிய பட்டணம் என்றால், ஒரு பகுதியான 4 கோத்திரத்துக்கு (4*4=16) 16 லேவிய பட்டணங்கள் இருக்கும்.
முதல் மூன்று மாதம் மேல்பகுதியில் உள்ள 4 கோத்திரத்தில் உள்ள, 16 லேவியப்பட்டணத்திலிருந்து வாலிபர்களை அழைத்து வேத பாட வகுப்பு எடுத்தார். இவர் மூன்று மாதம் கற்றுக் கொடுத்ததை, அவர்கள் 9 மாதங்கள் மக்களுக்குச் சென்று கற்றுக் கொடுக்க வேண்டும். அடுத்த 3 மாதங்கள் நடுப்பகுதி, அடுத்த 3 மாதங்கள் கீழ் பகுதி, கடைசி 3 மாதம் அவர் வீடு. அடுத்த வருடம், மூன்று மாதம் வரும்போது, வேறு காரியங்களை கற்றுக் கொடுப்பார். 20 வருடங்களாக சாமுவேலின் வாழ்க்கை இப்படித்தான் இருந்தது. ஒரு வருடத்தில் சாமுவேல், முதல் மூன்று மாதங்கள் கில்காலிலும், அடுத்த மூன்று மாதங்கள் பெத்தேலிலும், அடுத்த மூன்று மாதங்கள் மிஸ்பாவிலும் தங்கி இருப்பார். அதற்கு அடுத்த கடைசி மூன்று மாதங்கள் ராமாவிலே தன் வீட்டில் தங்கி இருப்பார். இப்படித்தான் சாமுவேலின் வாழ்க்கை 20 வருடங்கள் கழிந்தது. தேவனிடமிருந்து கற்றுக்கொண்டு, அதை லேவியர்களுக்கு கற்றுக் கொடுத்து, அவர்கள் மூலம் மக்களுக்கு கற்றுக் கொடுத்த நல்ல ஒரு ஆசிரியர் சாமுவேல். இஸ்ரவேலர்களை தேவனிடம் திருப்பிய ஒரு நல்ல தீர்க்கதரிசி சாமுவேல்.
I சாமுவேல் 19:18 தாவீது தப்பி, ராமாவிலிருந்த சாமுவேலிடத்திற்குப் போய், சவுல் தனக்குச் செய்தது எல்லாவற்றையும் அவனுக்கு அறிவித்தான்; பின்பு அவனும் சாமுவேலும் போய், நாயோதிலே தங்கியிருந்தார்கள்.
இவ்வசனத்தில் நாயோத் என்று சொல்லப்பட்டிருப்பது, ஒரு இடத்தின்(Place) பெயர் அல்ல. அர்த்தம் “dwellings,” “lodgings,” “house of study,” i.e. student’s lodgings. அதாவது, தீர்க்கதரிசிகளின் புத்திரருக்கு தங்கி படிக்கும்படி ஒரு இடம் சாமுவேலால் தொடங்கப்பட்டது. “sons of the prophets,” என்பவர்கள் தீர்க்கதரிசிகளுக்கு பிறந்தவர்கள் அல்ல, தீர்க்கதரிசியிடம் படிப்பவர்கள். இந்த பள்ளியை முதலில் தொடங்கியவர் சாமுவேல். எலியா தீர்க்கதரிசியிடம் கூட, பின் நாட்களில், தீர்க்கதரிசிகளின் புத்திரர் இருந்ததாக வேதத்தில் படிக்கலாம். சவுல் தாவீது என்ற இரண்டு ராஜாக்களையும் அபிஷேகம் செய்தவர் சாமுவேல்.
சாமுவேலின் பிறப்பு நம் எல்லாரும் அறிந்த ஒன்று. அன்னாளின் ஜெபம் அறியாதவர்கள் இருக்க முடியாது. “அன்னாள் பொருத்தனை செய்தாள், தேவன் அவள் ஜெபத்தைக் கேட்டார், சாமுவேல் பிறந்தார். எனவே பொருத்தனை ஜெபம் வல்லமையானது” என்று நாம் அனேகமுறை கேட்டிருப்போம்.
1 நாளாகமம் 6ம் அதிகாரத்தில், 33-37 வசனங்கள், கோராகின் சந்ததி பற்றி போட்டிருக்கும். கோராகிலிருந்து 16வது தலைமுறை சாமுவேல்.
சந்ததி
பெயர்கள்
கோராகு
1
எபியாசாப்
2
ஆசீர்
3
தாகாத்
4
செப்பனியா
5
அசரியா
6
யோவேல்
7
எல்க்கானா
8
அமாசாய்
9
மாகாத்
10
இல்க்கானா
11
சூப்
12
தோவாக்
13
எலியேல்
14
யெரொகாம்
15
எல்க்கானா
16
சாமுவேல்
எண்ணாகமம் 16ம் அதிகாரத்தில் ஒரு சம்பவம் நடக்கிறது. கோராகு என்பவன், சில மனிதரை கூட்டிக்கொண்டு, மோசேக்கு விரோதமாக பேசுகிறான். அப்பொழுது மோசேக்கு விரோதமாக கூடினவர்கள் குடும்பத்தோடு பூமி விழுங்கிப் போட்டது என்று வேதத்தில் படிக்கலாம். நன்றாகப் படித்தால், தாத்தானும் அபிராமும் தான், பிள்ளைகள், மனைவியோடு நின்று இருப்பார்கள். காரண கர்த்தாவான கோராகுவோ, தனியாகத் தான் நின்று இருப்பார். அவரை மட்டும்தான் பூமி விழுங்கியது. அவருடைய சந்ததி பூமியில் வாழ்ந்தார்கள்.
இந்த சந்ததி சந்தோஷமாக வாழ்ந்தார்களா என்று கேட்டால், இல்லை என்பது தான் பதில். அனைவரும் ஒதுக்கிவைத்த ஒடுக்கப்பட்ட குடும்பம் தான், கோராகின் சந்ததி.
எங்கள் தகப்பன் வனாந்தரத்தில் மரணமடைந்தார்; அவர் கர்த்தருக்கு விரோதமாகக் கூடின கோராகின் கூட்டத்தாரில் சேர்ந்தவர் அல்ல, தம்முடைய பாவத்தினாலே மரித்தார்; அவருக்குக் குமாரர் இல்லை.
எண்ணாகமம் 27-3
ஆக, இஸ்ரவேலர் எல்லாருமே ‘அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் அல்ல. நாங்கள் நல்லவர்கள்’ என்று மோசமான எடுத்துக்காட்டாக, கோராகின் குடும்பத்தைக் கூறிக்கொண்டு இருந்தார்கள். அவர்கள் லேவி கோத்திரம் என்றாலும், அவர்களுக்கு ஆசாரிய வேலை கொடுக்கப்படவில்லை. அப்படிப்பட்ட கோத்திரத்திலிருந்து, அன்னாள் பொருத்தனை செய்கிறார், “ஒரு பிள்ளை கொடுத்தால் அவனைக் கர்த்தருக்கு கொடுப்பேன்” என்று. அது மிகப்பெரிய விஷயம். ஒரு சாபமான கோத்திரத்திலிருந்து, 16வது தலைமுறையில் சாபத்தை உடைக்க பிறந்தவர்தான் சாமுவேல். இன்று நமக்கும் சில தடைகள், தாமதங்கள் இருக்குமாயின், பெரிய ஆசீர்வாதம் வந்து கொண்டிருக்கிறது என்று நம்பிக்கையோடு காத்திருப்போம்.
இஸ்ரவேலர் என்று அவர்களுக்கு நியாயப்பிரமாணத்தைக் கற்றுக்கொடுத்து, முழு இஸ்ரவேலையும் ஒரே தேசமாக்கி, சவுலை ராஜாவாக ஏற்படுத்தினவர் சாமுவேல்.
Leave a Reply