Paul_2

சவுல் என்ற பவுல் – தர்சு பட்டணம்
சவுல் என்ற பவுல், சிலிசியா நாட்டில் (இன்றைய துருக்கி) உள்ள தர்சு பட்டணத்தில் பிறந்தார். [Tarsus, Cilicia]
வேத வசனங்கள்:
அப்போஸ்தலர் 21:39
“அதற்குப் பவுல்: நான் சிலிசியா நாட்டிலுள்ள கீர்த்திபெற்ற தர்சுபட்டணத்து யூதன்…”
சவுல் அப்போஸ்தலர் 9ஆம் அதிகாரத்தில், கண் குருடனாக மாறிய பிறகு, அவனைச் சரிப்படுத்தும்படி கர்த்தர் அனனியாவை அனுப்புகிறார். அப்போது அனனியாவிடம்,
அப்போஸ்தலர் 9:11
“தர்சு பட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு” என்று கூறப்படுகிறது.
அப்போஸ்தலர் 22:3
“நான் யூதன், சிலிசியா நாட்டிலுள்ள தர்சுபட்டணத்திலே பிறந்து, இந்த நகரத்திலே கமாலியேலின் பாதத்தருகே வளர்ந்து, முன்னோர்களுடைய வேதப்பிரமாணத்தின்படியே திட்டமாய்ப் போதிக்கப்பட்டு, இன்றையத்தினம் நீங்களெல்லாரும் தேவனைக்குறித்து வைராக்கியமுள்ளவர்களாயிருக்கிறதுபோல நானும் வைராக்கியமுள்ளவனாயிருந்தேன்.”
ரோம சாம்ராஜ்யம் பரவும்போது, கிமு 67ல், பாம்பி தி கிரேட் (Pompey the Great) என்பவர் இந்தத் தர்சு பட்டணத்தைக் கைப்பற்றி, அதை ரோம சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக மாற்றினார். இந்தப் பட்டணம் அமைந்திருந்த இடம், சிரியாவுக்கு அருகிலும், மத்திய தரைக்கடலை இணைக்கும் முக்கியப் பாதையிலும் அமைந்திருந்தது. அதாவது, இந்தப் பட்டணம் மத்திய தரைக்கடல் கடற்கரையிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் (9 மைல்கள்) தொலைவில் இருந்தது.
இப்பட்டணத்தில் கப்பல் போக்குவரத்தும் இருந்ததால், அது ஒரு முக்கியமான வணிக மையமாக மாறியது. பிற தேசங்களிலிருந்து வரும் இராணுவ நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்கும் தர்சு நகரம் ரோம சாம்ராஜ்யத்துக்கு முக்கியமானதாக இருந்தது. பாம்பி இப்பகுதியைக் கைப்பற்றிய பிறகு, சிலிசியாவை புதிய ரோம மாகாணமாக மாற்றினார்.
கிமு 55ல், ரோம சாம்ராஜ்யத்தை, தன் படையில் சேர்ந்த மார்க் ஆன்டனியின் உதவியுடன், ஜூலியஸ் சீசர் உருவாக்கினார். அவரது கொலைக்குப் பிறகு, கிமு 44ல் மார்க் ஆன்டனி ஆட்சியைப் பிடித்தார். இந்த இரு அரசர்களுக்குமே தர்சு பட்டணம் உண்மையாக இருந்தது. அவர்களின் விசுவாசத்துக்காக, மார்க் ஆண்டனி இந்தப் பட்டணத்துக்கு “சுதந்திர பட்டணம்” free city என்ற அந்தஸ்தை வழங்கினார். அதனால் இப்பட்டணம் வரிவிலக்கு பெற்று, யாரும் வரி செலுத்தத் தேவையில்லாமல் இருந்தது.
அகஸ்டஸ்
மார்க் ஆண்டனிக்குப் பிறகு, கிமு 27ல் அகஸ்டஸ் ஆட்சிக்கு வந்தார். இந்த அகஸ்டஸ் என்பவர்தான் வேதத்தில் கூறப்பட்ட அகஸ்து ராயன். இவர்தான் குடிமதிப்பெழுதக் கட்டளை கொடுத்தவர். மரியாள் பெத்லகேமுக்கு வந்து இயேசு பிறந்தபோது ராஜாவாக இருந்தவரும் இவர்தான். பவுலும் இந்தக் காலகட்டத்தில் பிறந்திருக்கலாம் என்று கூறுகிறார்கள்.
திபெரியஸ்
கிபி 14ல் திபெரியஸ் ஆட்சிக்கு வந்தார். இவர்தான் வேதத்தில் லூக்கா 3:1ல் கூறப்பட்டுள்ள திபெரியு ராயன். இவரது 15ஆம் வருடத்தில் இயேசு ஊழியம் செய்ய ஆரம்பித்ததாக வேதம் கூறுகிறது. இயேசுவின் சிலுவை மரணத்தின்போது ஆட்சி செய்தவரும் இவரே.
கலிகுலா
அடுத்ததாக, கிபி 37ல் கலிகுலா ஆட்சிக்கு வந்து, கொடுங்கோல் ஆட்சி செய்தார். ஆனால் இவரது ஆட்சியில் சீஷர்கள் கொலை செய்யப்படவில்லை. முதல் சீஷர் மரணம், யாக்கோபின் மரணம், கிபி 44ல் தான், இவரது மரணத்துக்குப் பிறகு நடந்தது.
கிளாடியஸ்
அடுத்ததாக, கிபி 41ல் கிளாடியஸ் ஆட்சிக்கு வந்தார். இவரது ஆட்சிக்காலத்தில், யாக்கோபு என்ற ஒரு சீஷரின் கொலை நடந்தது. இவர் வேதத்தில் கூறப்பட்டுள்ள கிலவுதியு ராயன்.
அப்போஸ்தலர் 11:28
“அவர்களில் ஒருவனாகிய அகபு என்பவன் எழுந்து, உலகமெங்கும் கொடிய பஞ்சம் உண்டாகும் என்று ஆவியானவராலே அறிவித்தான்; அது அப்படியே கிலவுதியு பேரரசனுடைய நாட்களிலே உண்டாயிற்று.”
அப்போஸ்தலர் 18:2
“யூதரெல்லாரும் ரோமாபுரியை விட்டுப் போகும்படி கிலவுதியுராயன் கட்டளையிட்டபடியினாலே, இத்தாலியாவிலிருந்து புதிதாய் வந்திருந்த பொந்து தேசத்தானாகிய ஆக்கில்லா என்னும் நாமமுள்ள ஒரு யூதனையும் அவன் மனைவியாகிய பிரிஸ்கில்லாளையும் அங்கே கண்டு, அவர்களிடத்திற்குப் போனான்.”
நீரோ
அடுத்ததாக, கிபி 54ல் நீரோ மன்னன் ஆட்சியைப் பிடித்தார். இவர் ரோமானிய வரலாற்றின் மிகவும் சர்ச்சைக்குரிய பேரரசர். கிபி 64ல் ரோம் நகரம் தீப்பற்றி எரிந்தபோது, இவர் வீணை வாசித்துக்கொண்டிருந்தார் என்ற புகழ்பெற்ற கதை இவரைப் பற்றியதே ஆகும்.
பவுலின் இறப்பு இந்த நீரோ மன்னனுடைய ஆட்சியில்தான் என்று வேத அறிஞர்கள் கூறுகிறார்கள்.
ரோமப் பேரரசர்களின் காலவரிசை
கிமு 67 – பாம்பி தி கிரேட்
கிமு 55 – ஜூலியஸ் சீசர்
கிமு 44 – மார்க் ஆன்டனி
கிமு 27 – அகஸ்டஸ்
கிபி 14 – திபெரியஸ்
கிபி 37 – கலிகுலா
கிபி 41 – கிளாடியஸ்
கிபி 54 – நீரோ
பவுலுக்கு ரோம குடியுரிமை எப்படி கிடைத்தது?
மார்க் ஆண்டனி, தர்சு பட்டணத்துக்கு வரிவிலக்கு அளித்தார். அதோடு, அவர்கள் ராஜாவுக்கு விசுவாசமாக இருப்பதைப் பார்த்து, முக்கிய குடிமக்களுக்கு ரோம குடியுரிமை வழங்கினார்.
அப்படித்தான் பவுலுக்கும் பிறப்பாலேயே ரோம குடியுரிமை வழங்கப்பட்டது.
பவுல் கற்றுக்கொண்ட கைத்தொழில்
பவுல் பிறந்த தர்சு (Tarsus) நகரம், ஆடுகளின் உரோமத்திலிருந்தும் கம்பளியிலிருந்தும் செய்யப்படும் “சிலிசியம்” (Cilicium) என்ற பாய்மரம் மற்றும் கூடாரத் துணிகளுக்குப் புகழ்பெற்ற உலகளாவிய மையமாக இருந்தது.
யூத வழக்கப்படி, ஒரு வாலிபன் எவ்வளவு பெரிய கல்வி கற்றிருந்தாலும், பவுலைப் போன்ற ஒரு பெரிய நியாயப்பிரமாண அறிஞராக இருந்தாலும், அவன் தன் வாழ்வாதாரத்திற்காக ஒரு கைத்தொழிலைக் கற்றிருக்க வேண்டும்.
அதன்படி, பவுல் சிறுவயதிலேயே தர்சு நகரில் இந்தத் தொழிலைக் கற்றுக்கொண்டார்.
சவுலும் பவுலும் – இரண்டு பெயர்கள்
ரோம குடியுரிமை பெற்றவர்கள், இயல்பாகவே இரண்டு பெயர்களைக் கொண்டிருப்பார்கள். ஒன்று ரோம குடியுரிமை பெற்றவர் என்பதைக் குறிக்கும் வகையில் ரோமர்களுக்காகப் பயன்படுத்தப்படும் பெயர். மற்றொன்று அவர்களின் குடும்பப் பெயராகவோ அல்லது இன, மதப் பின்னணியைச் சார்ந்த பெயராகவோ இருக்கும். பவுலும் இரண்டு பெயர்களைக் கொண்டிருந்தார்.
சவுல் என்பது எபிரேயப் பெயர். அதன் பொருள் “கேட்கப்பட்டவர்” அல்லது “விரும்பப்பட்டவர்” (asked for or desired) என்பதாகும். இது இஸ்ரவேலின் முதல் அரசரைக் கௌரவிக்கிறது.
பவுல் என்பது லத்தீன் அல்லது ரோமானியப் பெயர் (Latin or Roman name). அதன் பொருள் “சிறிய” அல்லது “குட்டியான” (small or little) என்பதாகும்.
அவர் தனது யூத சமூகத்திற்குள் சவுல் என்ற பெயரைப் பயன்படுத்தினார். அவர் கிரேக்கர்களிடமும் ரோமானியர்களிடமும் பேசும்போது பவுல் என்ற பெயரைப் பயன்படுத்தினார்.
அவர் கிறிஸ்தவரான பிறகும் அவரது பெயர் மாறவில்லை.
