Deliverance Ministries -2
விடுதலை – 12
Deliverance Ministries -2 (விடுதலை ஊழியங்கள் 2)
லூக்கா 4:18
கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,
இயேசு எப்படி ஊழியம் செய்தார் என்பதைப் பார்த்தோம். இயேசுவால் மட்டும்தான் இப்படி ஊழியம் செய்ய முடியுமா? இல்லையே. அவரை விசுவாசிக்கிறவன், அவரைப் பார்க்கிலும் பெரிய காரியங்களைச் செய்வான் என்று வேதம் சொல்கிறது.
யோவான் 20:21
இயேசு மறுபடியும் அவர்களை நோக்கி: உங்களுக்குச் சமாதானமுண்டாவதாக; பிதா என்னை அனுப்பினதுபோல நானும் உங்களை அனுப்புகிறேன்
யோவான் 14:12
மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிறகிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.
கடந்த பாகத்தில் பார்த்தது போல, விடுதலை என்பது வெறும் பிசாசுகளை துரத்துவது மட்டுமல்ல. அப்படியானால் விடுதலை என்றால் என்ன? நம் ஒவ்வொருவருக்கும் பிரச்சனைகள் அசுத்த ஆவிகளிடமிருந்து மட்டும் வருவது இல்லை. பல பிரச்சனைகள் வருவதற்கு நாம் தான் காரணமாக இருப்போம். சில பிரச்சனைகள் தலைமுறை சாபத்தால் வருகிறது. சாத்தான் சில சமயங்கள் நம் மீது legal actions எடுப்பதால் கூட பிரச்சனைகள் வருகிறது.
விடுதலை ஊழியத்தில் என்ன செய்ய வேண்டும்?
தனிப்பட்ட நபருக்கான inner healing
அசுத்த ஆவிகள் ஒரு மனிதனுடைய வாழ்க்கைக்குள் சுலபமாக நுழைய முடியாது. நாம் ஏதோ ஒரு கதவை திறந்து வைத்திருப்பதால் தான் அவை உள்ளே வந்திருக்கும். பல சமயங்களில், ஜெபத்தின் மூலம் அந்த கிரியையை துரத்தி விட்டாலும், மீண்டும் அது உள்ளே வருவதற்கு காரணம், அசுத்த ஆவி வெளியேறியவுடன், அது உள்ளே நுழைந்த கதவை மூடி, அந்த இடத்தை பரிசுத்த ஆவியானவர் நிரப்பும்படி ஜெபிக்க தவறி விடுகிறோம். அதனால், அந்த கதவின் மூலம் தன்னுடன் இன்னும் சில ஆவிகளை கூட்டி வந்து, மீண்டும் பிரச்சனையை தொடர வைக்கிறது.
பிசாசுக்கு எப்படி கதவு திறக்கப்பட்டிருக்கும்?
- பாவம் – நாம் செய்யும் சின்ன சின்ன பாவங்கள், நம்மை அடிமைப்படுத்தி, பெரிய பாவத்துக்கு கொண்டு செல்லும். சில இச்சைகள் அடிமைத்தனத்துக்கு கொண்டு செல்லும்.
- மன்னிக்காமை – எல்லாரையும் மன்னிப்பது நம்மால் கூடாத காரியம் தான். ஆனால் சிந்தித்து பாருங்கள், நாம் எவ்வளவு பின் வாங்கிப் போனாலும், மீண்டும் மீண்டும் இயேசு நம்மை மன்னித்துக் கொண்டு இருக்கிறார். மன்னிக்காமை என்பது, ஒரு பெரிய கதவை திறந்து வைத்திருக்கும்.
- தலைமுறை சாபங்கள் – தலைமுறை சாபங்கள், நாம் பிறக்கும்போதே பெரிய கதவை திறந்து அசுத்த கிரியைகளை வரவேற்கிறது.
- தலைமுறை பாவங்கள் – சில சமயம் அப்பா செய்த பாவம், மகனாலும் செய்யப்படும். இதற்கு காரணம், அந்தக் கதவு திறப்பில் இருக்கிறது. (தினமும் முன்னோரின் பாவம் என் குடும்பத்தை தாக்க கூடாது என்ற ஜெபம் அவசியம்)
- சுய சாபங்கள் – இதை நாம் வெகு சுலபமாக செய்வோம். “நான் செத்தால் தான் நிம்மதி”, “என் வாழ்க்கையே பாழாய் போச்சு”, “எனக்கு அவ்வளவு திறமை இல்லை”, “நான் ஒரு பயந்தாங்கொள்ளி” இப்படி negative words எல்லாமே, ஒரு கதவை open செய்து கொண்டு தான் இருக்கிறது.
- பலவீனமான தருணம் – விபத்து, திடீர் அதிர்ச்சி, உணர்ச்சி காயம் போன்ற நேரத்தில் நாம் பலவீனமாக சிந்திக்கும்போது, நம்மை அறியாமல் அசுத்த ஆவிகள் சுலபமாக உள் நுழைகின்றன.
- தீய உடன்படிக்கை – மந்திரவாதம், ஜோதிடம் போன்ற காரியங்களில் ஈடுப்படும்போது, ஒரு தீய உடன்படிக்கை உருவாகி, ஒரு கதவு திறக்கிறது.
- Soul ties – திருமணத்துக்கு மீறிய உறவு, sexual relationship, Pornography மூலமாக, சிலருடன் ஆத்தும பிணைப்பு ஏற்பட்டு, மிகப்பெரிய கதவு திறக்கப்படுகிறது.
இவை எடுத்துக்காட்டாக சொல்லப்பட்டவை தான். நமது கோபம், வெறுப்பு, கசப்பு, இச்சை, பொறாமை என்று கதவைத் திறக்கும் காரணிகள் இன்னும் அநேகம் உள்ளன.
ஒரு தனி மனிதனுடைய உள்ளார்ந்த மனந்திரும்புதல் மிகவும் அவசியம். அதோடு, சில கதவுகளை மூடி, அதன் மூலம் உருவான அந்த வெறுமையான இடத்தில் பரிசுத்த ஆவியானவரை நிரப்புவது மிகவும் அவசியம்.
முக்கியமான கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் என்னவெனில், “எந்த கதவு திறக்கப்பட்டிருக்கும்? எந்த ஆவி கிரியை செய்கிறது?” என்றெல்லாம் எண்ணுவதை விட்டு விட்டு, இயேசுவினுடைய அன்பை எண்ணிப் பாருங்கள். பிசாசின் காரியங்கள் அல்ல, இயேசுவையும், தேவனுடைய அன்பையும் சிந்தியுங்கள்.
“சிலுவை அன்பு, கிருபை, நான் நீதிமான், கிறிஸ்துவுக்குள் நான் யார்? நான் அவருடைய சொந்த பிள்ளை, அவருடைய நாமத்தை சொல்லி என்னால் பிசாசை துரத்த முடியும்…” இப்படிப்பட்ட சிந்தனைகளில் மூழ்கும்போது, சுலபமாக திறந்த கதவுகளை அடைக்க, அடைக்கப்பட்ட அந்த வெற்றிடத்தில் ஆவியானவர் வசிக்க, கர்த்தர் கிருபை செய்வார்.
தொடர்ந்து பார்க்கலாம்…
