தாவீதின் பாவம்
தாவீதைப் பற்றிய பல காரியங்களைப் பார்த்தோம். பலருக்கு தாவீது என்றவுடன், பத்சேபாள் தான் நினைவுக்கு வருவார். அதைத் தாண்டி, தாவீது செய்த பல காரியங்களைப் பார்த்தோம். அதிலும் இராட்சதர்களை பூமியில் இராமல் அழித்து போட்டவர் தாவீது என்பது முக்கியமானது.
தாவீது பாவம் செய்யவில்லையா? ஆம், அவர் பாவம் செய்தார். பத்சேபாளுடன் செய்தது பாவம் தான். அது மட்டும்தானா என்றால் இல்லை. தாவீது இன்னொரு முக்கியமான பாவம் செய்தார். என்ன அது?
2 சாமுவேல் 24
1.கர்த்தருடைய கோபம் திரும்ப இஸ்ரவேலின்மேல் மூண்டது. இஸ்ரவேல் யூதா என்பவர்களை இலக்கம் பார் என்று அவர்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிறதற்கு தாவீது ஏவப்பட்டான்.
2.அப்படியே ராஜா தன்னோடிருக்கிற சேனாபதியாகிய யோவாபைப் பார்த்து: ஜனங்களின் இலக்கத்தை நான் அறியும்படிக்கு நீ தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேலரின் கோத்திரமெங்கும் சுற்றித்திரிந்து ஜனங்களைத் தொகையிடுங்கள் என்றான்.
3.அப்பொழுது யோவாப் ராஜாவைப்பார்த்து: ராஜாவாகிய என் ஆண்டவனுடைய கண்கள் காணும்படி உம்முடைய தேவனாகிய கர்த்தர் ஜனங்களை இப்பொழுது இருக்கிறதைப்பார்க்கிலும், நூறுமடங்கு அதிகமாய் வர்த்திக்கப்பண்ணுவாராக; ஆனாலும் என் ஆண்டவனாகிய ராஜா இந்தக் காரியத்தை விரும்புகிறது என்ன என்றான்.
4.ஆகிலும் யோவாபும் இராணுவத்தலைவரும் சொன்ன வார்த்தை செல்லாதபடிக்கு, ராஜாவின் வார்த்தை பலத்தது; அப்படியே இஸ்ரவேல் ஜனங்களைத் தொகையிட, யோவாபும் இராணுவத்தலைவரும் ராஜாவைவிட்டு புறப்பட்டுப்போய்,
8.இப்படி தேசமெங்கும் சுற்றித்திரிந்து, ஒன்பது மாதமும் இருபதுநாளும் ஆனபிற்பாடு எருசலேமுக்கு வந்தார்கள்.
9.யோவாப் ஜனத்தை இலக்கம்பார்த்த தொகையை ராஜாவுக்குக் கொடுத்தான்; இஸ்ரவேலிலே பட்டயம் உருவத்தக்க யுத்த சேவகர் எட்டுலட்சம்பேர் இருந்தார்கள்; யூதா மனுஷர் ஐந்து லட்சம் பேர் இருந்தார்கள்.
10.இவ்விதமாய் ஜனங்களை எண்ணின பின்பு, ராஜாவின் இருதயம் அவனை வாதித்தது; அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: நான் இப்படிச் செய்ததினாலே பெரிய பாவஞ்செய்தேன்; இப்போதும் ஆண்டவரே, உமது அடியானின் அக்கிரமத்தை நீக்கிவிடும், நான் மகாபுத்தியீனமாய்ச் செய்தேன் என்றான்.
11.தாவீது காலமே எழுந்திருந்தபோது, தாவீதின் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத் என்னும் தீர்க்கதரிசிக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகிச் சொன்னது:
12.நீ தாவீதினிடத்தில் போய், மூன்றுகாரியங்களை உனக்கு முன்பாக வைக்கிறேன்; அவைகளில் ஒரு காரியத்தைத் தெரிந்துகொள், அதை நான் உனக்குச்செய்வேன் என்று கர்த்தர் உரைக்கிறார் என்று சொல் என்றார்.
13.அப்படியே காத் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: உம்முடைய தேசத்திலே ஏழு வருஷம் பஞ்சம் வரவேண்டுமோ, அல்லது மூன்றுமாதம் உம்முடைய சத்துருக்கள் உம்மைப் பின்தொடர, நீர் அவர்களுக்கு முன்பாக ஓடிப்போகவேண்டுமோ? அல்லது உம்முடைய தேசத்திலே மூன்றுநாள் கொள்ளைநோய் உண்டாகவேண்டுமோ? இப்போதும் என்னை அனுப்பினவருக்கு நான் என்ன மறு உத்தரவு கொண்டுபோகவேண்டும் என்பதை நீர் யோசித்துப்பாரும் என்று சொன்னான்.
14.அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன், இப்போது நாம் கர்த்தருடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான்.
15.அப்பொழுது கர்த்தர் இஸ்ரவேலிலே அன்று காலமே தொடங்கி குறித்தகாலம்வரைக்கும் கொள்ளைநோயை வரப்பண்ணினார்; அதினால் தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள ஜனங்களில் எழுபதினாயிரம்பேர் செத்துப்போனார்கள்.
16.தேவதூதன் எருசலேமை அழிக்கத்தன் கையை அதின்மேல் நீட்டிபோது, கர்த்தர் அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு, ஜனங்களைச் சங்கரிக்கிற தூதனை நோக்கி: போதும், இப்போது உன் கையை நிறுத்து என்றார்; அந்த வேளையில் கர்த்தருடைய தூதன் எபூசியனாகியா அர்வனாவின் போரடிக்கிற களத்திற்கு நேரே இருந்தான்.
17.ஜனத்தை உபாதிக்கிற தூதனை தாவீது கண்டபோது, அவன் கர்த்தரை நோக்கி: இதோ, நான்தான் பாவஞ்செய்தேன்; நான்தான் அக்கிரமம்பண்ணினேன்; இந்த ஆடுகள் என்ன செய்தது? உம்முடைய கை எனக்கும் என் தகப்பன் வீட்டுக்கும் விரோதமாயிருப்பதாக என்று விண்ணப்பம்பண்ணினான்.
18.அன்றைய தினம் காத் என்பவன் தாவீதினிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் போய், எபூசியனாகிய அர்வனாவின் களத்திலே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தை உண்டாக்கும் என்றான்.
19.காத்துடைய வார்த்தையின்படியே தாவீது கர்த்தர் கற்பித்த பிரகாரமாகப் போனான்.
25.அங்கே தாவீது கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தினான்; அப்பொழுது கர்த்தர் தேசத்துக்காகச் செய்யப்பட்ட வேண்டுதலைக் கேட்டருளினார், இஸ்ரவேலின்மேல் இருந்த அந்த வாதை நிறுத்தப்பட்டது.
முதல் காரணம்
இச்சம்வத்தில் தாவீது என்ன பாவம் செய்தார்? நான் அனேக நாட்கள் யோசித்ததுண்டு. ‘எல்லாருமே தன்னிடம் எவ்வளவு போர்ச்சேவகர் இருக்கிறார்கள் என்று அறிந்து, அதன்படி யுத்தத்துக்கான திட்டம் வகுப்பார்கள். தாவீதும் அதையே தான் செய்தார், தேவனுக்கு ஏன் கோபம் வர வேண்டும்?’
அந்த இடத்தில் உண்மையாகவே தாவீது அறிய நினைத்தது, “யூதா கோத்திரத்தில் படைவீரர்கள் எவ்வளவு பேர்? மற்ற கோத்திரங்களை கணக்கிட்டால் எவ்வளவு பேர்?” ஏன் இந்த கணக்கெடுப்பு எடுக்க நினைத்தார் தாவீது?
நம் காலத்தைப் போல தான் அப்போதும் தாவீது செய்தார். தாவீது, யூதா கோத்திரத்தை சேர்ந்தவர். அவரை முதலில் ராஜாவாக்கியதும் யூதா கோத்திரத்தார் தான். சவுலின் மரணத்துக்கு பிறகு தான், முழு 12 கோத்திரத்தையும் தனதாக்கி, இஸ்ரவேல் என்று முழு தேசத்தையும் ஆட்சி செய்தார். ஆனாலும், நம் ஜாதியில்(யூதா கோத்திரத்தில்) எத்தனை பேர், பிற ஜாதி வீரர்கள் எத்தனை பேர் என்று தாவீது அறிய நினைத்தார். அதனால்தான் இந்த கணக்கெடுப்பு நடந்தது. இஸ்ரவேலிலே பட்டயம் உருவத்தக்க யுத்த சேவகர் எட்டுலட்சம்பேர் இருந்தார்கள்; யூதா மனுஷர் ஐந்து லட்சம் பேர் இருந்தார்கள்.
மொத்தம் 13 லட்சம் பேர் இருக்கிறார்கள் என்று சொல்லவில்லை. இஸ்ரவேலில் 8லட்சம், யூதாவில் 5 லட்சம் என்று தான் சொல்கிறார்கள். தேவன் முழு தேசமாக தாவீதின் கையில் கொடுத்திருக்க, தாவீதோ பிரித்து விட்டார். அதனால் தேவ கோபம் வந்தது.
இரண்டாம் காரணம்
யாத்திராகமம் 30:12 நீ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் இலக்கத்தின்படி கணக்குப்பார்க்கும் பொருட்டு, அவர்களை எண்ணும்போது, அவர்களுக்குள்ளே ஒரு வாதை உண்டாகாதபடிக்கு, அவர்களில் ஒவ்வொருவனும் எண்ணப்படும் சமயத்தில் தன்தன் ஆத்துமாவுக்காகக் கர்த்தருக்கு மீட்கும் பொருளைக் கொடுக்கக்கடவன்.
Thiru Viviliam “நீ இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கைக்காகக் குடிக்கணக்கு எடுக்கும் போது, எண்ணிக்கைக்குட்பட்டவர் ஒவ்வொருவரும் தம் உயிருக்கு ஈடாக ஆண்டவருக்கு மீட்புப் பணம் கட்டவேண்டும். இல்லையெனில் அவர்கள் கணக்கிடப்படுகையில் அவர்களிடையே கொள்ளை நோய் வந்துவிடும்.
தேவன் ஏற்கனவே அவர்களுக்கு, நியாயப்பிரமாணத்தில் கொடுத்திருக்கிறார், கணக்கெடுப்பு நடத்தினால், அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப காணிக்கை செலுத்தவேண்டும் என்று. ஏன் அப்படி சொன்னார்? தெரியாது. ஆனால் நிச்சயமாக அதற்கு பின்னால் ஆவிக்குரிய காரணங்கள் இருக்கும். ஆனால் இந்த விஷயத்தில் தாவீது நியாயப்பிரமாணத்தை மீறி விட்டதால் வாதை வந்தது.
ஏன் கொள்ளை நோயை தேர்ந்தெடுத்தார்?
தாவீதுக்கு தேவன் 3 ஆப்சன் கொடுத்தார். முதலாவது, பஞ்சம். இரண்டாவது யுத்தம். மூன்றாவது கொள்ளை நோய். பஞ்சம் என்றால், ராஜா தன் ஜனங்களுக்காக, பிற தேசத்தில் உணவு கேட்க வேண்டும். யுத்தம் என்றால், பிற தேசத்தோடு யுத்தம் செய்ய வேண்டும், அதற்கு தன் போர் வீரர்களின் தயவு வேண்டும். மனிதன் முன்பாக போக்ககூடாது என்று, சுய நலமாக யோசித்து தாவீது கொள்ளை நோய் பக்கம் சென்றாரா? இல்லை.
14.அப்பொழுது தாவீது கர்த்தரை நோக்கி: கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன், இப்போது நாம் கர்த்தருடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது; மனுஷர் கையிலே விழாதிருப்பேனாக என்றான்.
தாவீது சுய நலமாக கொள்ளை நோய்க்கு செல்லவில்லை. தாவீது நன்றாக அறிந்திருந்தார், அவர் பஞ்சம் என்றாலும் சரி, யுத்தம் என்றாலும் சரி, அவர் எப்படியும் வெற்றி பெற்று விடுவார், மனிதர்களின் உதவியால். ஆனால் கொள்ளை நோய் என்றால், தேவன் தான் மனமிறங்க வேண்டும். தேவன் மன்னித்தாரா இல்லையா என்பதையும் கொள்ளை நோய் சரியாவதன் மூலமாக தாவீது அறிய முடியும். அதோடு, தேவன் எவ்வளவு இரக்கமுள்ளவர் என்பதையும் அவர் அறிந்திருந்தார். அதனால்தான் அந்த தண்டனையை செலெக்ட் செய்தார்.
பலி செலுத்திய இடம்
இந்த தண்டனையை நிறுத்துவதற்கு தேவன் பலி செலுத்த சொன்னார். எந்த இடத்திலும் தாவீது பலி செலுத்தலாம். ஆனால் தேவனே ஒரு இடத்தை சொல்லி, அங்கே பலி செலுத்த வேண்டும் என்று சொல்கிறார் ஒரு இடத்தை தேவனே செலெக்ட் செய்தால், அது எவ்வளவு முக்கியமானது அல்லவா. ஆம், அங்கே தான் சாலமோனை ஆலயம் கட்ட சொன்னார். தேவாலயம் கட்டப்பட்ட இடம் அது. இஸ்ரவேலர் இன்றும் மூன்றாவது ஆலயம் கட்ட போராடிக் கொண்டிருப்பது அதே இடத்தில்தான்.
எது எப்படியோ? அந்த தண்டனையின் மூலம் தான், தேவன் தங்குமிடம் இஸ்ரவேலருக்கு வெளிப்பட்டது. அதுவும் நன்மைக்கே. இனி சாலமோனைப் பற்றி பார்த்துவிட்டு, ஒவ்வொரு சாம்ராஜ்யங்களைப் பார்க்கலாம்.
Leave a Reply